பதிவு செய்த நாள்
16 டிச2018
05:37
திருப்பூர்:ஜி.எஸ்.டி.,க்கு பின், தொடர்ந்து சரிவடைந்து வந்த நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
மத்திய அரசு, 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அமல்படுத்தியது. இந்த வரி விதிப்புக்குப் பின், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரியத் துவங்கியது. கடந்த, 2016 – 17 நிதியாண்டில், 1 லட்சத்து, 16 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2017 – -18ல், 1 லட்சத்து, 7,680 கோடி ரூபாயாக சரிந்தது; இது, 10.81 சதவீதம் சரிவு.
நடப்பாண்டு, நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தொடர்ந்து சரிவை நோக்கியே சென்றது. ஏப்ரல் மாதம், 21.40 சதவீதம்; மே மாதம், 12.59; ஜூன் மாதம், 7.79 சதவீதம் என, முதல் காலாண்டிலும் ஏற்றுமதி சரிந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின், முதன் முறையாக, கடந்த ஜூலை மாதம், 5.98 சதவீதம்; ஆகஸ்ட் மாதம், 5.03 சதவீதம் என, ஆடை ஏற்றுமதி அதிகரித்தது.
இருப்பினும், இந்த வளர்ச்சி நிலைக்கவில்லை; கடந்த, செப்டம்பர் மாதம், 25.57 சதவீதம் வர்த்தக சரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் இருந்து, தொழில் துறை படிப்படியாக ஏற்றம் கண்டு, கடந்த, அக்டோபர் முதல், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.கடந்த, 2017 – 18 நிதியாண்டின், அக்டோபர் மாதத்தை விட, நடப்பு நிதியாண்டு, அக்டோபர் மாதம் ஏற்றுமதி, 54.16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல், 2017 – 18 நிதியாண்டின், நவம்பர் மாதத்தை விட, நடப்பு நிதியாண்டில், 20.72 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
லாபம் குறைவு ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர், விஜயகுமார் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,க்குப் பின், ஆயத்த ஆடை ஏற்றுமதி,மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கு, அதிகளவு ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. டிராபேக் சலுகை குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வர்த்தகத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் குறைந்துள்ளது.உற்பத்தி செலவினங்களை குறைத்து, லாபத்தை உயர்த்த நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.
மத்திய அரசும், ஊக்கச் சலுகைகள் வழங்கி, ஏற்றுமதி வர்த்தகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நுால் ஏற்றுமதி அதிகரிப்புநம் நாட்டிலிருந்து, சீனா, வியட்னாம், வங்கதேசம் உட்பட, பல்வேறு நாடுகளுக்கு பருத்தி, செயற்கை நுாலிழை, துணி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆடை ஏற்றுமதியைப் போல், நுால் மற்றும் துணி ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.
2017 –- 18 நிதியாண்டின், நவம்பர் மாதம், 5,686 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டு, நவம்பர் மாதம், 5,967 கோடி ரூபாயாக, 4.95 சதவீதம் அதிகரித்துள்ளது. செயற்கை நுால், துணி ஏற்றுமதி, 7.52 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|