பதிவு செய்த நாள்
16 டிச2018
05:41
மும்பை:‘‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் பிரச்னைக்கு, தவணை கால நீட்டிப்பு போன்ற சலுகைகள் வழங்குவதை விட, பொது கடன் பதிவேடு நடைமுறையை அறிமுகப்படுத்துவது, நல்ல தீர்வாக இருக்கும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை கருதி, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகிய இரு பெரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாதிப்புஇதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அவை, வங்கிக் கடன் தவணையை திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கடன் தவணைக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், அந்நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடவில்லை.குறு, சிறு, நடுத்தர நிறுவன கடன்களை மறுசீரமைக்கவும், புதிய கடன்களை தாராளமாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.மேலும், தீவிர கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்ற, 11 வங்கிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, மீண்டும் கடன் வழங்க வகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இதை, ரிசர்வ் வங்கி கண்டு கொள்ளவில்லை.எனவே, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் உள்ள, தன் பிரதிநிதிகள் வாயிலாக, அழுத்தம் கொடுக்கத் துவங்கியது.கடன் மறுசீரமைப்புஇதையடுத்து, கடந்த மாதம், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு, 25 கோடி ரூபாய்க் கும் குறைவாக கடன் பெற்ற, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துமாறு, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழுவை கேட்டுக் கொண்டது.
ஒரு மாதம் கழிந்த நிலையில், இது குறித்து, மும்பை, ஐ.ஐ.டி., யில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா பேசியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என, ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறது.
கடன் தவணை தவறும் நிறுவனங்களுக்கு, மேலும் ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்கு தனி சலுகை அளிப்பதை விட, பிரச்னையின் வேரை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் நிரந்தர தீர்வு காணவே ரிசர்வ் வங்கி விரும்புகிறது.இதற்காக, பொது கடன் பதிவேடு நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதில், அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெற்ற கடன், ஏற்கனவே வாங்கியிருந்த கடன், கடனை திரும்பச் செலுத்திய விபரம், கடன்தாரர்களின் நிரந்தர வருவாய், கடன் கொடுத்த வங்கிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெறும்.இதன் மூலம், கடன் கோருவோர் குறித்த அனைத்து தகவல்களையும், எந்த வங்கியாலும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், வழங்கும் கடனுக்கான இடர்ப்பாட்டு நிலை குறித்தும் மதிப்பிட முடியும். நம்பிக்கையான நிறுவனங்களுக்கு, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடியும்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வெறுமனே கடனை துாக்கிக் கொடுப்பதை விட, கடன் வழங்கப்படுவதில், ஒரு நீதி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சட்டம் இயற்றலாம்பல நாடுகளில், சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன், ‘பொது கடன் பதிவேடு’ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி, தற்போதுள்ள அதிகாரத்தின் கீழ், இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தலாம். இப்பணியின் போதே, மத்திய அரசும் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.
விரால் ஆச்சார்யாதுணை கவர்னர், ரிசர்வ் வங்கி
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|