பதிவு செய்த நாள்
18 டிச2018
23:23
புதுடில்லி : உலகில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள, சவுதி அரேபியா, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகளில், முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இம்மாத துவக்கத்தில், ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா – ஆனந்த் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன.இதில் பங்கேற்க வந்த, சவுதி பெட்ரோலிய துறை அமைச்சர், காலித் அல் பாலிஹ், முகேஷ் அம்பானியுடன், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தியுள்ளார். இதை, அவர் தற்போது, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அதில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், சுத்திகரிப்பு மற்றும் தொலைத் தொடர்பு திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பேசியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, ரிலையன்ஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சவுதி அரேபியா, இந்திய எரிபொருள் சந்தையில் கால் பதிக்க, நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வருகிறது.உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, சவுதி அரம்கோ, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, மஹாராஷ்டிராவில், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்றவற்றால், திட்டம் தாமதமாகி வருகிறது.எனினும், ரத்னகிரி மாவட்டத்தில், 2025க்குள், ஆண்டுக்கு, 6 கோடி டன் சுத்திகரிப்பு திறன் மற்றும் 1.8 கோடி டன் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சலைகளை அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குவைத் நாடும், இந்திய எரிபொருள் சந்தையில், முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின், ஜாம்நகரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு, 6.82 கோடி டன் சுத்திகரிப்பு திறனுடைய, இரண்டு ஆலைகள் உள்ளன. இந்தியாவின், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 24.76 கோடி டன்; தேவை, 20.60 கோடி டன். இது, 2040ல், 45.80 கோடி டன்னாக உயரும் என, சர்வதேச எரிசக்தி முகமை மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|