பதிவு செய்த நாள்
18 டிச2018
23:26
புதுடில்லி : ‘‘நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க உதவும், திவால் சட்டத்தில், கடன் தீர்வு திட்டங்களையும் சேர்ப்பது குறித்து, வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது: வங்கியில் கடன் பெற்று, திரும்பத் தராத நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி, கடன் தீர்வு மற்றும் கடன் மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தது.ஆனால், இத்திட்டங்கள் போதிய அளவிற்கு பயன் தரவில்லை. இந்நிலையில் தான், மத்திய அரசு, 2016ல், திவால் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், வங்கிகளின் வாராக் கடன் வசூல் அதிகரித்துள்ளது.
திவால் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, போதிய அளவிற்கு பயன் தராத அனைத்து கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும் ரத்து செய்தது.தற்போது, திவால் சட்டத்தின் கீழ், பல நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம், வாராக் கடனை வசூலிக்க உதவுகிறது என்றபோதிலும், கடனை திரும்பச் செலுத்தும் நிறுவனங்கள் புத்துயிர் பெறுவதற்கும் உதவுகிறதா... என, பார்க்க வேண்டும்.
இயல்பு நிலை:
அவ்வாறு இல்லாத பட்சத்தில், புத்துயிரூட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். இது குறித்த விவாதத்திற்கு, இது சரியான தருணம் அல்ல என, நான் கருதுகிறேன். ஏனெனில், ஏராளமான நிறுவனங்கள் மீது, திவால் சட்டம் பாய்ந்துள்ளது.அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை குறைந்து, வர்த்தகச் சூழல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்.
நிறுவனங்களிடம், வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காக திரும்பச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம், மேலோங்கும். திவால் சட்டம் காரணமாக, கடன் தருவோர் மற்றும் கடன் பெறுவோர் இடையே, மீண்டும் நேர்மையான நல்லுறவு மிளிரும்.அப்படிப்பட்ட சூழல் உருவாகும்போது, திவால் சட்டத்தில், கடன் தீர்வு திட்டங்களை இணைக்க, சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.
தற்போது, அதற்கான சூழல் உருவாகவில்லை.மேலும், திவால் சட்டம், 29ஏ பிரிவில், குறிப்பாக, ‘நிறுவனங்களை சார்ந்தோர்’ என்ற சொற்பதம், மாறுபட்ட கருத்தை பிரதிபலிப்பதாக, தொழில் துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்தும் விவாதிக்கப்பட்டு, உரிய நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை:
கடன் தவணையை சரிவர செலுத்த தவறும் நிறுவனங்களுக்கு, கடன் தீர்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களின் கீழ், வங்கிகள், சலுகைகள் வழங்கி வந்தன. கடனை திரும்பச் செலுத்துவோருக்கு, வட்டி தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.கடன் மறுசீரமைப்பு திட்டங்களில், பழைய கடன்கள், புதிய கடன்களாக பதிவு செய்யப்பட்டன. இருந்தபோதும், வங்கிகளின் வாராக் கடன் சுமை பெருமளவு அதிகரித்த சூழலில்தான், திவால் சட்டம் அமலுக்கு வந்தது.இதையடுத்து, வங்கிகளுக்கான அனைத்து கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும், இந்தாண்டு துவக்கத்தில், ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|