பதிவு செய்த நாள்
04 ஜன2019
05:51
புதுடில்லி:அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அவற்றுக்கான சுங்க வரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும், 5,000 ரூபாய் மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இதை பயன்படுத்தி, சீன வலைதள நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துஉள்ளது.இந்தியாவில் இருந்து, சீன வலைதள நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமான, ‘ஆர்டர்’கள் கிடைக்கின்றன.
அவற்றின் வினியோகத்தில், வாய்ப்புள்ள பொருட்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக, தொழில் துறையின் சில பிரிவினர், மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து, அன்பளிப்பு பொருட்களுக்கான சுங்க வரியை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்பளிப்பு பொருட்களின் சுங்க வரிச் சலுகையை, சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து, தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை செயலர் தலைமையிலான நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அப்போது, 5,000 ரூபாய் வரையிலான அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கை ரத்து செய்யலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வரி விலக்கை ரத்து செய்யாமல், ஒருவர் ஆண்டுக்கு, நான்கு முறை மட்டுமே, அன்பளிப்பு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள், பொருட்களை அனுப்பும் நாடுகள் ஆகியவை குறித்து, தீவிரமாக கண்காணிக்குமாறு, மத்திய வருவாய் துறையை கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.விரைவில், அன்பளிப்பு பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|