பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:21
சென்னை : ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நிறுவனம், சென்னையில், ஐ.சி.எப்., நிறுவனத்துக்கு தேவையான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாகங்களை தயாரித்து வழங்குவதற்காக, புதிய ஆலை ஒன்றை அமைத்துள்ளது.
ஜெ.எஸ்.எல்., லைப்ஸ்டைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ரயில் பெட்டிகள் தயாரிக்க பயன்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்களை, ஐ.சி.எப்., நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடியும் என்றும், 300 கோடி ரூபாய் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையிலிருந்து, தரமிக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்களை ரயில் பெட்டி தயாரிப்பதற்காக வழங்க இருக்கிறது.இந்த ஸ்டீல்கள் ரயில் பெட்டியின் தரை, கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும்.
இது குறித்து, ஜெ.எஸ்.எல்., லைப்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபிகா ஜிண்டால் கூறியதாவது:எங்களுக்கும் இந்திய ரயில்வேக்கும் இடையே, 20 ஆண்டுகளாக நல்ல தொடர்பு உள்ளது. இப்போது சென்னையில் அமைத்துள்ள இந்த ஆலையின் மூலம், இந்த உறவு மேலும் வலுப்படும்.
இந்த ஆலையில் ஆண்டுக்கு, 4,800 டன் பாகங்கள் தயாரிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது, 7,200 டன்னாக அதிகரிக்கப்படும். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ், ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால், ஐ.சி.எப்.,பி-ல் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|