பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:49
புதுடில்லி: இந்தியாவில், ‘சுயேச்சையான கடன் மேலாண்மை அமைப்பு’ ஒன்றை ஏற்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார், ‘நிடி ஆயோக்’கின் துணைத் தலைவரான ராஜீவ் குமார்.மத்திய அரசு, கடன் பத்திரங்களை வெளியிடுவது உட்பட, பல்வேறு வழிகளில் தேவையான நிதியை திரட்டிக் கொள்கிறது.ரிசர்வ் வங்கி, மத்திய அரசு சார்பில் கடன் பத்திரங்களை வெளியிடுவது, இதர கடன்களை வாங்குவது, கடன்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், அரசின்கடன்களை நிர்வகிக்க, சுயேச்சையான தனி அமைப்பு தேவை என, நிடி ஆயோக் துணைத் தலைவர், ராஜீவ் குமார் கூறியுள்ளார்.நேற்று, நிடி ஆயோக் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:கடந்த, 2015 பட்ஜெட் உரையிலேயே நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பொது கடன் மேலாண்மை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.அத்தகைய ஓர் அமைப்பு சுயேச்சையாக செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் தான், அரசின் பொது கடன்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும். அக்கடன்களின் மூலம் ஏற்படும் செலவினங்களை அரசால் குறைக்கவும் முடியும். தற்சமயம், சந்தையில் இருந்து கடன் வாங்குவது உட்பட, அரசு கடன்கள் அத்தனையையும் மத்திய ரிசர்வ் வங்கியே நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆர்.பி.ஐ.,யின் பல்வேறு பொறுப்புகளை எப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி, அரசு முடிவெடுக்க வேண்டும்.அப்படி நடக்குமானால், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கடன் மற்றும் இதர சட்ட ரீதியான அம்சங்களை யார் யார் கவனிப்பர் என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும்.அரசின் பொது கடன் மேலாண்மை அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தேவை, ஆர்.பி.ஐ.,யின் செயல்பாட்டில் உள்ள முரண்பாட்டில் இருந்தே துவங்குகிறது.ரிசர்வ் வங்கி, இந்தியாவில் வட்டி விகிதங்களையும் நிர்ணயம் செய்கிறது.அதேசமயம், அரசின் கடன் பத்திரங்களை வாங்குவதையும், விற்பதையும் அதுவே செய்து வருகிறது. இவை, இரண்டு முரண்பட்ட பணிகள்; அவற்றை பிரிப்பது அவசியம்.மேலும், இந்தியாவுக்கு சர்வதேச அளவிலான மிகப்பெரும் வங்கிகள் தேவை. தற்போது, இந்தியாவில் உள்ள மிகப்பெரும் வங்கி என்பது சர்வதேச அளவில், 60வது பெரிய வங்கி தான். இதனால், நம்மால் சர்வதேச பொருளாதார சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.நமக்கு ஒருசில மிகப்பெரும் வங்கிகள் மட்டுமே இருந்தால் போதுமானது. அவை சர்வதேச அளவில் போட்டியிடக் கூடியதாக இருப்பதோடு, முதலீட்டாளர்களின் நிதியை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதை செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கூடுதல் நிதியை இந்த வங்கிகளில் முதலீடு செய்து பெரிதாக்க வேண்டும் அல்லது சிறு வங்கிகளை இணைத்து பெரிதாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்திய வங்கிகள் நிதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டியதில்லை. அது, ஏற்கனவே உள்ள, ‘பேஸல் – 3’ வரையறைகளைப் பின்பற்றினாலே போதுமானது. குறிப்பாக, வங்கிகளில் இருக்க வேண்டிய நிதிக் கையிருப்பு தொடர்பாக, ‘பேஸல் – 3’ வரையறைகளே போதுமானவை!-ராஜீவ் குமார், துணைத் தலைவர், ‘நிடி ஆயோக்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|