பதிவு செய்த நாள்
23 பிப்2019
23:26
புதுடில்லி: இனிமேல் நிறுவனங்கள் தங்களது பதிவு அலுவலகங்களின் புகைப்படங்கள், அதன் புவியியல் அமைப்பு விபரங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும் என, மத்திய அரசு புதிய உத்தரவை வழங்க இருக்கிறது.போலி நிறுவனங்கள்அதிகரிப்பு மற்றும் பினாமி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இனி நிறுவனங்கள் தங்களது பதிவு அலுவலகங்களின் புகைப்படங்களை அரசுக்கு அளிப்பதோடு, அந்த அலுவலகம் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டும் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்களையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.ஏற்கனவே, போலி நிறுவனங்களை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு நிறுவனமும், அதன் ஆடிட்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பற்றிய விபரங்களை வழங்க வேண்டும் என, நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கோரியுள்ளது.மேலும், கறுப்புப் பண நடமாட்டத்துக்கு காரணமாக இருக்கும் போலி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு, மத்திய அரசு, ‘ஆக்டிவ் – -1’ என்னும் புதிய மின்னணு படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.கம்பெனிகளின் விபரங்களை பதிவு செய்வதற்கும், சரிபார்ப்பதற்கும் உதவுவதே, ‘ஆக்டிவ் – -1’ படிவமாகும்.கடந்த ஆண்டு டிசம்பர், 31க்கு முன் வரை பதிவு செய்த நிறுவனங்கள், ஆக்டிவ் – -1 படிவத்தை, வரும் ஏப்., 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தேதிக்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், தாமத கட்டணமாக, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும். அது மட்டுமின்றி, அந்த நிறுவனத்தின் மீது, ‘ஆக்டிவ் திட்டத்தை பின்பற்றாதவர்’ என்ற முத்திரையும் குத்தப்படும்.இருப்பினும், ஏற்கனவே பதிவை விலக்கிக் கொண்ட நிறுவனங்கள் அல்லது அந்த முயற்சியில் உள்ள நிறுவனங்கள், ஆக்டிவ் – -1 படிவத்தை வழங்க வேண்டியதில்லை. அவற்றுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள் தங்களது பதிவு அலுவலகத்தின் புகைப்படத்தை அளிப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் அல்லது ஆக்டிவ் படிவத்தில் கையெழுத்திடும் நிர்வாகியின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக, போலி நிறுவனங்கள், பினாமி சொத்துகள், கறுப்புப் பண பரிவர்த்தனைகள், பல்வேறு வரி ஏய்ப்புகள் ஆகியவற்றை தடுப்பதற்கு, புதிய சட்டத் திருத்தங்களும், நிர்வாக நெறி முறைகளும் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், நிறுவன விவகாரங்கள் துறை, நிறுவனங்களின் புகைப்படங்களை கேட்பது இதுவே முதன்முறை.இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும், அவற்றின் பின்னால் உள்ள நிர்வாகிகளையும் இனங்கண்டு பதிவு செய்யும் முயற்சி இது என, நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.அரசின் தொடர் நடவடிக்கைகள் மூலம், 1.30 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சத்து, 38 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.-பியுஷ் கோயல், மத்திய அமைச்சர் இடைக்கால பட்ஜெட் உரையின் போது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|