பதிவு செய்த நாள்
25 மார்2019
06:34
வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் சூழலில், முதலீட்டாளர்கள் உத்தி எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஒரு கண்ணோட்டம்.
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக, வங்கி வைப்பு நிதிகள் அமைகின்றன. அண்மை காலத்தில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் வரும் மாதங்களில் உயரும் வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல், சராசரி முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடியதாக அமைகிறது. கடன் வளர்ச்சி விகிதம், வைப்புநிதிகளின் வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருப்பதால், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ளதாக, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
கடன் விகிதமும், வைப்பு நிதி விகிதமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. வங்கிகள் பொதுவாக வைப்பு நிதி மூலம் பணம் திரட்டி, கடன் வழங்குகின்றன. கடன் வளர்ச்சி அதிகரித்தால், அதற்கு ஈடுகட்ட வங்கிகள் வைப்பு நிதி திரட்டுவதில் கவனம் செலுத்தும். தற்போதைய சூழலில், வைப்பு நிதி வளர்ச்சியை விட, கடன் வளர்ச்சி வேகம் அதிகமாக உள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த, 2018 டிசம்பர் மாத காலத்தில், ஆண்டு அடிப்படையிலான கடன் வளர்ச்சி, 12.9 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், வைப்பு நிதி வளர்ச்சி, 9.3 சதவீதமாக இருக்கிறது.
கடன் வளர்ச்சி மற்றும் வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி காரணமாக, வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி அளிக்கும் நிலை உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் கடன் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வேண்டியிருப்பதால், வைப்பு நிதி திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் நிலை உள்ளது. இன்னொரு பக்கத்தில், வைப்பு நிதி திரட்ட வங்கிகளிடையே போட்டியும் நிலவுகிறது. ஏற்கனவே தனியார் வங்கிகள் அதிக கடன் வளர்ச்சி பெற்றிருப்பதால், அவை அதிக வட்டி மூலம் ஈர்த்து வைப்பு நிதி திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பொது துறை வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகும்.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில், வைப்பு நிதி வட்டி விகிதமும் உயரும் வாய்ப்புள்ளது. வைப்பு நிதி முதலீட்டை நாடும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, இது நல்ல செய்தி தான். இந்த நிலையில், வைப்பு நிதியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், பெரிய தொகையை தற்போதைய வட்டி விகிதத்தில் முடக்கிவிடாமல், காத்திருந்து அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்யலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிக வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல், மற்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர். அதிக வட்டி விகிதம் எனும் போது, முதலீட்டிற்கான காலமும் அதிகம் இருக்கலாம் மற்றும் வேறு நிபந்தனைகளும் இருக்கலாம்.
ஒரு சில வங்கிகள், வைப்பு நிதிகளை முன்கூட்டியே விலக்கி கொள்ள நிபந்தனைகள் விதிக்கலாம். மேலும் வைப்பு நிதிகள் அளிக்கும் பலன், வரி விதிப்புக்கு உட்பட்டவை. அதிக வரி வரம்பில் உள்ளவர்களுக்கு, இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். எனவே, ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையை, குறுகிய கால அளவிற்கு முதலீடு செய்யும் உத்தியை பின்பற்றலாம். ரிஸ்க் தன்மை, வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|