பதிவு செய்த நாள்
03 ஏப்2019
23:08
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி திட்டத்தில் பதிவு செய்ய, நிறுவனங்கள் அளிக்கும் புதிய விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு, வரி அதிகாரிகளுக்கு, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த, 2017, ஜூலை, 1ல், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., முறை அமலுக்கு வந்தது. இதுவரை, 1.20 கோடி நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளன.இவற்றில், விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது; அந்நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., பதிவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு, பதிவு ரத்தான நிறுவனங்கள், பழைய வரி நிலுவையை செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், மீண்டும் புதிதாக, ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்பது, வரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.மேலும், பல நிறுவனங்கள், ரத்து செய்யப்பட்ட பதிவை, புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்காமல், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு, வரி வசூல் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு நிறுவனம் அதன், ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண் மூலம், ஒரு மாநிலத்திற்குள், மற்றொரு, ஜி.எஸ்.டி., கணக்கை துவக்க, சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால், அதற்கான விண்ணப்பத்தில், ஏற்கனவே பதிவு செய்த விபரங்களை குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாமல், புதிதாக, ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்வது போல, நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன.
இத்தகைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அதிகாரிகள், குறைபாடுகளை கண்டுபிடித்தால், ஜி.எஸ்.டி., பதிவை நிராகரிக்கலாம்.எனவே, முழுமையாக விபரங்களை அளிக்காமல் வரும் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகுந்த கவனமுடன் ஆராய்ந்து, உரிய முடிவு எடுக்க வேண்டும் என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை பாய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|