பதிவு செய்த நாள்
13 ஏப்2019
00:42
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளுக்கு, சிறந்த நிர்வாகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான, சுயாட்சி அதிகாரத்தை வழங்கலாம் என, வங்கிகள் வாரியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பி.பி.சர்மா தலைமையிலான வங்கிகள் வாரியம், 2018அக்., – 2019 மார்ச் வரையிலான செயல்பாட்டு அறிக்கையை, மத்திய அரசுக்கு வழங்கிஉள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுத் துறை வங்கிகளுக்கு, சிறந்த நிர்வாகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான, சுயாட்சி அதிகாரத்தை வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கலாம்.அதேசமயம், பொதுத் துறை வங்கிகள் கடைப்பிடிக்கும் கடன் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் வங்கிகளின் கடன் செலவை குறைக்கலாம். வங்கிகள் கடன் ஒதுக்கீடும் அதிகரிக்கும்.
ஊக்கம்
இடர்ப்பாடு குறைவான வருவாய்க்கு வழி காணும் வங்கிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதேசமயம், நிர்வாகச் செயல்பாடுகளில் குறைபாடுள்ள வங்கிகளுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும்.செயல்பாடு அடிப்படையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, இ.எஸ்.ஓ.எஸ்., எனப்படும், வங்கி ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
மதிப்பீட்டு காலத்தில், வாரியம் எடுத்த நடவடிக்கையால், பொதுத் துறை வங்கிகளில் காலியான, முழுநேர இயக்குனர்களின் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டன. எனினும், கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பணியிடத்தைத் நிரப்ப முடியவில்லை.இப்பணியிடம் தொடர்பாக, இரு முறை விளம்பரம் வெளியிடப்பட்டது. பொதுத் துறை வங்கிகள் தவிர்த்து, வெளியில் உள்ள தகுதி படைத் தோரும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.இருந்தபோதிலும், இரு முறையும், மிகக் குறைவான விண்ணப்பங்களே வந்தன.
எல்.ஐ.சி.,
இது போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, வல்லுனர்களுக்கான பயிற்சி திட்டம் குறித்த பரிந்துரை, அரசிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.வங்கிகளை தொடர்ந்து, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குனர்களை பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரைக்கும் பொறுப்பும், தற்போது, வங்கிகள் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், இந்தாண்டு ஜன.,4ல், எல்.ஐ.சி., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கான பரிந்துரையை, வாரியம் வழங்கியது.
மத்திய அரசு, வங்கிகளின் வர்த்தக செயல்பாடுகள், மறுசீரமைக்கப்பட வேண்டும் என, விரும்புகிறது. அதற்கு, வங்கிகளின் இயக்குனர் குழு ஊக்குவிக்கப்பட வேண்டும். வங்கி செயல்பாடுகளை மேம்படுத்தவும், சூழலுக்கு ஏற்ப, தேவைப்பட்டால், வங்கிகளை இணைப்பதற்கான திட்டங்களையும் வழங்கும் பொறுப்பு, வாரியத்திற்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சிக்கு வழிகாட்டி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2016ல், பொருளாதார வல்லுனர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய, வங்கிகள் வாரியம் அமைக்க அனுமதி வழங்கியது. பொதுத் துறை வங்கிகளின் செயல்சாரா தலைவர், முழுநேர இயக்குனர் ஆகியோரை தேர்வு செய்து, பரிந்துரைக்கும் பணியை வாரியம் மேற்கொள்கிறது. பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்கும் பணியும், வங்கிகள் இணைப்பு குறித்த ஆலோசனைகளையும், இவ்வாரியம் வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|