பதிவு செய்த நாள்
15 ஏப்2019
00:03
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, தொடர் உயர்வுக்கு பிறகு, கடந்த இரு வாரங்களாக, சிறிய அளவிலான ஏற்றத் தாழ்வுகளுடன் சரிவில் வர்த்தகம் ஆகி வருகிறது.
கடந்த வாரம், புதிய ஒரு வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்து சந்தையின் போக்கு, வரவிருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் மற்றும் நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.கடந்த மார்ச் மாதத்தில், நிப்டி குறியீட்டு எண், 800 புள்ளிகள் வரை உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை, 200 புள்ளிகள் ஏற்றத்தாழ்வுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள், கடந்த இரு மாதங்களுக்கு பிறகு, வார அளவில் முதன் முதலாக சரிவை சந்தித்துள்ளன.
கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டான, ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்துக்கான நிதி அறிக்கைகளை, நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. மேலும் பல நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவர உள்ளன. இந்த நிதி நிலை அறிக்கைகள், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், அதையொட்டி வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பெருமளவிலான தொகையை, சந்தையில் முதலீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த, 2014ல், பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன், 83 ஆயிரத்து, 423 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடாக வந்தது.
இதே நிலை இப்போதும் தொடர்கிறது. நடப்பாண்டில், தற்போது வரை, 97 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 42 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் வட்டி விகிதத்தை அதிகரிக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்தது. ஆனால், இப்போது அதை மாற்றி, வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை, முதலீடு வளரும் நாடுகளின் பக்கம் திரும்பியது. அதில், அவர்களை இந்தியா பெருமளவு ஈர்த்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில், இந்திய தொழில் துறை வளர்ச்சி குறியீடு, 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதுவே, 6.9 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது. கடந்த, 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், மார்ச் மாதத்தின் சில்லரை விலை பணவீக்க விகிதம், ஐந்து மாத உச்சத்தை எட்டியுள்ளது.
அதிகரித்த உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், சில்லரை விலை பணவீக்க விகிதம், 2.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்விரு பொருளாதாரக் காரணிகளும், சந்தையில் பங்குகள் விலை குறைய காரணமாக அமைந்தது.
நடந்து முடிந்த கருத்துக் கணிப்புகளின் முடிவில், ஆளும் மத்திய அரசு, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதி முடிவு வரும் வரை, பங்குச் சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடரும்.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி சப்போர்ட்,
11,600 மற்றும் 11,510; ரெசிஸ்டென்ஸ், 11760.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|