பதிவு செய்த நாள்
18 ஏப்2019
03:35
புதுடில்லி: வருமான வரித் துறை, வரி ஏய்ப்பை தடுக்க, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான, படிவம் – 16ல், புதிய அம்சங்களை சேர்த்துள்ளது.
தொழில் நிறுவனங்கள், ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு, ஊதியத்தில், டி.டி.எஸ்., எனப்படும் மூல வரி பிடித்தம் செய்த விபரங்களை, படிவம் – 16 மூலம் வழங்குகின்றன. ஊழியர்கள், இந்த படிவத்துடன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில், படிவம் – 16ல் புதிய விபரங்களை, வருமான வரித் துறை சேர்த்துள்ளது. அதன்படி, இனி, சொந்த வீட்டின் மூலம் கிடைத்த வருவாய், பிற நிறுவனங்களிடம் பகுதி நேரமாகவோ அல்லது ஒப்பந்த முறையிலோ பணியாற்றி பெற்ற தொகை உள்ளிட்ட விபரங்களை, ஊழியர்கள் அளிக்க வேண்டும்.
ஊக்கத் தொகை:
மேலும், பல்வேறு வரி சேமிப்பு திட்டங்களில் பிடித்தம் செய்த தொகை, அத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களிடம் இருந்து ஊழியர்கள் பெற்ற பல்வேறு ஊக்கத் தொகை மற்றும் இதர வருவாய் குறித்த தகவல்களை, புதிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.மேலும், வங்கி சேமிப்பு கணக்கு மூலம் ஈட்டிய வட்டி தொகையில், பிடித்தம் செய்யப்பட்ட வரி விபரங்களை அளிக்க வேண்டும்.
வரி ஏய்ப்பை தடுப்பதற்கும், வருமான வரித் துறை அதிகாரிகள், சுலபமாக மூல வரி பிடித்தம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கவும், புதிய படிவம் உதவும்.வரும், மே, 12ல், வருமான வரித் துறையின், புதிய படிவம் – 16 வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018 -– 19ம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோர், புதிய படிவம் – 16 உடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
வருமான வரித் துறை, 2018- – 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோரும், தணிக்கைக்கு அவசியமற்ற வகையில் வருவாய் ஈட்டுவோரும், வருமான வரி கணக்கை, வரும் ஜூலை, 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நிறுவனங்கள்:
வருமான வரித் துறையிடம், நிறுவனங்கள் தாக்கல் செய்யும், 24க்யூ படிவமும், மாற்றப்பட்டுள்ளது. அதில், ஊழியர்களின் வீட்டு வசதி கடன் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன. ஊழியர்கள், வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ, நிதி நிறுவனங்கள் தவிர்த்து, பிற நிறுவனங்களிடம் கடன் பெற்றால், அந்த நிறுவனங்களுக்கு, வருமான வரித் துறை அளித்துள்ள, ‘பான்’ எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணை, 24க்யூ படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
இது, அமைப்பு சாரா துறையில் பெறும் கடன், வட்டி உள்ளிட்ட விபரங்களை திரட்ட உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தனித் தனியாக:
சிறுசேமிப்பு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, முதலீடு, கல்வி, வீட்டு வசதி கடன் போன்றவற்றுக்கு, 80சி, 80சி.சி.டி., 80இ, 80ஜி போன்ற பிரிவுகளில், வரி விலக்கு சலுகை பெறப்படுகிறது. எனினும், அவ்விபரங்கள், மொத்தமாக வரி விலக்கு பிரிவின் கீழ் அளிக்கப்படுகின்றன. இனி, ஒவ்வொரு பிரிவிலும் பெற்ற வரி விலக்கு குறித்த விபரங்களை தனியே தெரிவிக்க வேண்டும். இது, வருமான வரி அதிகாரிகள், சுலபமாக கணக்கை பார்வையிட உதவும்.
-சன்ஜோலி மகேஸ்வரி, இயக்குனர், ‘நாங்கியா அட்வைசர்ஸ்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|