பதிவு செய்த நாள்
20 ஏப்2019
05:25
புதுடில்லி: தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கை விட குறைவாகவே உள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறு, சிறு நிறுவனங்கள் பிணையின்றி சுலபமாக கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடி, 2015, ஏப்., 8ல், ‘பிரதம மந்திரி முத்ரா திட்டம்’ என்ற நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில், வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, ‘சிஷூ, கிஷோர், தருண்’ என, மூன்று பிரிவுகளின் கீழ், கடன் வழங்குகின்றன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.
பெண்கள் முன்னேற்றம்:
பெண்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்கான முத்ரா திட்டத்தில், இந்தாண்டு, மார்ச், 22 நிலவரப்படி, 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்ரா மற்றும் விவசாயிகளுக்கான, ‘கிரெடிட் கார்டு’ திட்டங்களில், வாராக்கடன் பெருகி வருவது குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், கடந்த ஆண்டு, பார்லி., மதிப்பீட்டுக் குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
தில், வங்கிகள், கடன் வளர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சரிவர ஆராயாமல் தாராளமாக கடன் வழங்குவது ஆபத்து என்றும், அதனால், வருங்காலத்தில் வாராக்கடன் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்திருந்தார். முத்ரா மற்றும் விவசாய கிரெடிட் கார்டு திட்டங்களை, உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இதை தொடர்ந்து, இந்தாண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கியும், முத்ரா திட்டத்தில் வாராக் கடன் அதிகரித்துள்ளது குறித்து, மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இலக்கு:
இந்நிலையில், மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், பிரதம மந்திரி முத்ரா திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, குறைவாகவே உள்ளது. வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய, ‘பேசல்’ விதியில் நிர்ணயிக்கப்பட்டதை விட, முத்ரா திட்டத்தில் வாராக் கடன், 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, ஒருசில வங்கிகளின் வாராக்கடன், ரிசர்வ் வங்கியின் இலக்கை விட, சற்று அதிகரித்திருக்கக் கூடும். அப்படி இருந்தால் அது கவலைக்குரியது தான். எனினும், ஒட்டுமொத்த அளவில், முத்ரா திட்டத்தில் வாராக்கடன் கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குறு, சிறு நிறுவனங்கள்:
வங்கிகள், ‘முத்ரா’ திட்டத்தின் கீழ், குறு, சிறு, நிறுவனங்களுக்கு பிணையின்றி, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றன. கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இது, 2018- – 19ம் நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச், 22 வரை, இத்திட்டத்தில், 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஜனவரி இறுதி நிலவரப்படி, முத்ரா திட்டத்தில் வாராக்கடன், 11 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|