பதிவு செய்த நாள்
22 ஏப்2019
00:12
சந்தையில் புதிய நிறுவனங்களின் வரவு, முதலீட்டாளர்கள் அவற்றின் மீது காட்டும் நாட்டம், அவை பெறும் வரவேற்பு இவை எல்லாம் பங்குச் சந்தையின் மனநிலையைக் காட்டும் மிகச் சிறந்த குறியீடு.உலகளவில், பங்குச் சந்தைகளில் புதிய வரவுகள் மிக எளிதாகவும், சிறப்பாகவும் நடக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
நிறுவனங்களுக்கு இது நிதியை திரட்ட சிறந்த காலம். காரணம், முதலீட்டாளர்கள் புதிய நிறுவனங்களை விரும்பி வரவேற்கின்றனர்.இந்த சூழலைக் கண்டு உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடவும், தன்னுடைய பங்குகளை சந்தையில் வர்த்தகத்திற்கு கொண்டு வரவும் ஆர்வம் காட்டுகின்றன.இந்த வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் முக்கிய நிறுவனமான, ‘சவுதி அராம்கோ’ மற்றும் போக்குவரத்து சேவை நிறுவனமான, ‘ஊபர்’ ஆகியவை மிக முக்கியமான நிறுவனங்களாகும்.
இந்தியாவிலும் பல முன்னணி நிறுவனங்கள், புதிய பங்குகள் விற்பனைக்கு வரக்கூடும். இவை, வளரும் தொழில் பிரிவில் இருக்கலாம். அல்லது ஏற்கனவே வளர்ந்து, மேலும் விரிவாக்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே முதலீடு செய்த முதலீட்டாளர்களின் விற்கும் எண்ணத்தை நிறைவேற்றும் நிறுவனங்களாகவும் இருக்கலாம்.சமீபத்தில் வோடபோன் -ஐடியா நிகழ்த்திய உரிமை பங்கு வெளியீடும், மெட்ரோபொலிஸ் நிறுவனம் செய்த பொது வெளியீடும் குறிப்பிடும்படியான பங்கு வெளியீடுகள்.
தேர்தல் முடிந்ததும், மேலும் பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஒருவேளை இப்போது எதிர்பார்க்கப்படுவது போல் தெளிவான தேர்தல் முடிவு அமையும்பட்சத்தில், சந்தையில் புழங்கக்கூடிய உற்சாகத்தை பயன்படுத்திக்கொள்ள, நிறுவனங்கள் காட்டும் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது.இந்திய பெருநிறுவனங்களும், தங்களின் புதிய முதலீடுகளுக்கு தேவையான நிதியை விரைந்து சேகரிக்க, சந்தையை அணுகத் திட்டமிட்டுள்ளன. இந்த வேகம், சந்தைக்கு வரும் புதிய பண வரத்தை விரைந்து கைப்பற்றும் நோக்கத்தையே காட்டுகிறது.
இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில், அந்த பங்கு வெளியீடுகளே சந்தையின் உச்சத்தை தீர்மானிக்கும். அதற்குப் பிறகு, சந்தை மேலும் உயர வாய்ப்புகள் அதிகம் இருக்காது.அராம்கோ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வெற்றிகரமாக நிறைவேறினால், அது கச்சா எண்ணெய் சந்தைக்கும் ஒரு நெடுங்கால உச்சமாக அமையக் கூடும். தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயராது என்றே தோன்றுகிறது.இதேபோல, ஊபர் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, அமெரிக்க சந்தையில் உச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
கடந்த, 2008ல், ’ரிலையன்ஸ் பவர்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வந்து, அன்றைய மதிப்பில், 2.5 பில்லியன் டாலர் அதாவது, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி சந்தையின் உச்சத்தை உருவாக்கியது.தற்போது இந்திய பெருநிறுவனங்கள், 5 பில்லியன் முதல், 10 பில்லியன் டாலர் வரை அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், 35 ஆயிரம் கோடி முதல், 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிடுவதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின் வரக்கூடிய பங்கு வெளியீடுகள், சந்தையின் உச்சத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.வரும் வாரங்களில் சர்வதேச பங்கு வெளியீடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதோடு, தேர்தல் சார்ந்த நகர்வுகளையும், இந்திய பெருநிறுவன பங்கு வெளியீடுகளையும் கவனமாக ஆராய்ந்து, நம் இலக்குகளை மீண்டும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|