பதிவு செய்த நாள்
21 மே2019
06:37
மும்பை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிய வந்ததை அடுத்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகள், மிகப்பெரிய அளவிற்கு எழுச்சி கண்டன.
அதிக அளவில், பங்குகள் கைமாறியதால், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 1,421 புள்ளிகள் அதிகரித்து, 39,352.67 புள்ளிகளில் நிலை கொண்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக இந்த அளவிற்கு, புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு, ஒரே நாளில், 5.33 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மூன்று வர்த்தக தினங்களாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, மூன்று நாட்களில், 7.48 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 421.10 புள்ளிகள் உயர்ந்து, முதன் முறையாக, 11,828.25 புள்ளிகளை எட்டியது.
நம்பிக்கை:
நேற்று, இந்திய பங்குச் சந்தைகளில், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ் தவிர்த்து, அனைத்து நிறுவனப் பங்குகளும், அதிக அளவில், விலை உயர்வுடன் கைமாறின. இது குறித்து, கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த, 17வது லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என, கருத்துக் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
அதனால், மத்திய அரசின் கொள்கைகளும், திட்டச் செயல்பாடுகளும் மாற்றமின்றி தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை, இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. முதலீட்டாளர்கள், அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள், 23ம் தேதி வெளியாக உள்ளன. அதுவரை, பங்குச் சந்தைகளில் மிதமான ஏற்றம் காணப்படும். கருத்துக் கணிப்பை ஒட்டியே, தேர்தல் முடிவுகளும் அமைந்து விட்டால், பங்குச் சந்தைகள் மேலும் எழுச்சி காணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு கிடு கிடு:
* நேற்று, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 58 காசுகள் அதிகரித்து, 70.23ல் இருந்து, 69.65 ஆக உயர்ந்துள்ளது.
* வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்கு, ரிசர்வ் வங்கி தீர்வு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானதால், அந்நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது.
* இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், டி.எச்.எப்.எல்., நிறுவன பங்குகள், 10 சதவீதத்திற்கும் அதிகமான விலை உயர்வைக் கண்டன.
* வீட்டு வசதி கடன் வழங்கும், கிருஹ் பைனான்ஸ், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ், ரெப்கோ ஹோம், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகள் விலையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|