பதிவு செய்த நாள்
27 மே2019
06:49
குடும்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொண்டாலும், சில நேரங்களில் எதிர்பாராத செலவுகள் சிக்கலை ஏற்படுத்தலாம். மருத்துவ தேவை, வேலை இழப்பு, பராமரிப்பு என, பல காரணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இந்த செலவுகள் தவிர்க்க இயலாதவையாக அமையும் போது, அவற்றை சமாளிப்பதற்கான வழிகள் இதோ:
உதவி கேளுங்கள்: ‘எமர்ஜென்சி பண்ட்’ எனப்படும், அவசர கால நிதியை உருவாக்கி இருந்தால், எதிர்பாராத செலவுகளை சமாளிக்க நீங்கள் அல்லாட வேண்டியிருக்காது. ஆனால், அத்தகைய நிதி இல்லாத போது, நிலைமையை சமாளிக்க நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் உதவி கேட்கலாம். நிலைமை சீரானவுடன், பணத்தை திரும்பி தந்துவிடுவேன் என, உறுதி அளிக்கலாம்.
முதலீட்டை விற்பது: அவசர தேவைக்காக, முதலீட்டை விற்பது ஏற்ற வழி அல்ல. எனினும், மிகவும் அவசர தேவை எனில், கைவசம் உள்ள வளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், முதலீட்டை ரொக்கமாக மாற்றும் போது, அதற்கான செலவுகளை பரிசீலித்து கவனமாக முடிவு செய்யவும். நிலைமை சீரானவுடன் முதலீட்டை புதுப்பிக்க வேண்டும்.
குறைந்த வட்டி கடன்: கைவசம் போதுமான ரொக்கம் இல்லாத நிலையில், எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால், குறைந்த வட்டியிலான கடன் பெறும் வாய்ப்பை பரிசீலிக்கலாம். கடன் வசதியை அடிக்கடி நாடும் பழக்கம் இல்லாதவர்கள் எனில், அவசர தேவைக்காக குறைந்த வட்டி கடனை நாடுவது, இன்னும் ஏற்றதாக இருக்கும்.
விற்பனை வழி: எதிர்பாராத செலவால் திகைத்து போய்விட வேண்டாம். அதை சமாளிக்கும் வழிகள் உங்களிடமே இருக்கலாம். நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மதிப்பு மிக்க பொருட்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை விற்று செலவை சமாளிக்கலாம். மறு விற்பனை இணையதளங்கள் மூலம் இவற்றை விற்கலாம்.
பட்ஜெட் வழி: எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முயற்சிக்கும் நிலை, உங்கள் செலவு பழக்கங்களை கண்காணித்து, குடும்பத்திற்கான பட்ஜெட்டை உருவாக்கி கொள்வதற்கான சரியான நேரமாகும். தேவையில்லாத வீண் செலவுகளை குறைத்து, அவசர கால நிதியை உருவாக்க முயற்சிக்கவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|