பதிவு செய்த நாள்
27 மே2019
06:56
மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருக்கும் சூழலில், நம்முடைய முதலீட்டு பார்வைகள் எப்படி இருக்க வேண்டும்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? எல்லா பங்குகளையும் வாங்கலாமா? அல்லது, எத்தகைய பங்குகளை வாங்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன.
தேர்தல் பயத்தில், பல மாதங்களாக பங்குகளை வாங்க மறுத்த முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே அதிகமாக பதற்றம் தெரிகிறது.எங்கே, சந்தை உயர்ந்து, ஏற்றத்தில் பங்கேற்க முடியாமல் போய் விடுமோ என்ற பயம், ஒரு பக்கம் வாட்ட, இன்னொரு பக்கம், இப்போது வாங்குவது சாதகமாக இருக்குமா என்ற குழப்பம் வேறு, அவர்களுக்கு இருந்தது. அடிப்படையில், ஒரு செய்தியை எதிர்பார்த்து, பங்குகளை வாங்குவது தான் புத்திசாலித்தனம். செய்தி எல்லோருக்கும் தெரிந்த பின், வாங்க அவசரப்படுவது புத்திசாலித்தனம் அல்ல.
மோடியின் தேர்தல் வெற்றி, பெரும்பாலும் தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்வது மிக அவசியம். தேர்தல் பயம் அதிகமாக இருந்த நேரத்தில், பங்குகளை, வாங்கி குவித்தவர்கள் தான் புத்திசாலிகள்.அதுவும், நிப்டியின் உயர்வில், எந்த பங்குகள் பங்கேற்கும் என்று ஊகித்து வாங்கியவர்கள் தான் இந்த தேர்தல் சார்ந்த வர்த்தகத்தில் வெற்றி பெற்றவர்கள்.முடிவு வெளிவந்த பின், அதே பங்குகளை விரட்டி வாங்குபவர்கள், லாபம் அடைய நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படி பங்குகளை அவசரமாக வாங்கிவிட்டு, பிறகு நீண்ட காலம் காத்திருக்க பொறுமை இல்லாதவர்கள், பங்குகளை நிதானமாக யோசித்து வாங்குவது நல்லது.
மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பல பங்குகள், மதிப்பு ரீதியாக மிகச் சாதகமாக தெரிகின்றன. அப்படி தோன்றும் பங்குகளை ஆய்வு செய்து வாங்கலாம். அடுத்து, புதிய அரசு எடுக்கப் போகும் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பயனடையக்கூடிய பல துறைகளின் பங்குகள், இன்னும் குறைந்த மதிப்பில் வர்த்தகம் ஆகி வருகின்றன. முறையான தேர்வின் அடிப்படையில் இத்தகைய பங்குகளை வாங்கலாம்.ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்...
இப்போது, அவசர கதியாக அதிக பணத்தை முதலீடு செய்வது பன்னாட்டு முதலீட்டாளர்களே. அவர்கள் காட்டும் அவசரம் தொடர்வதற்கு, சர்வதேச சூழல்கள் சாதகமாக தொடர வேண்டும்.இதை உறுதியாக முன்கூட்டி சொல்ல முடியாது. அதே போல, வரும் வாரங்களில் வரவுள்ள, நம்முடைய பொருளாதார குறியீடுகள் சாதகமாக மாற வேண்டும். இதுவும் உறுதிபட சொல்ல முடியாத ஒன்று.பொருளாதார சூழல் சார்ந்த மாற்றங்கள், குறுகிய காலத்தில், சாதகமாக அமைவதை இப்போது உறுதிப்படுத்த முடியாது. மேலும், பட்ஜெட் பற்றிய கணிப்புகள் வரும்போது, சந்தை தன் போக்கை திடீரென மாற்றி கொள்ளும்.
ஆகவே, இப்போது யூக அடிப்படையில் அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஆய்வு அடிப்படையில், நீண்ட காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய குறிப்பிட்ட சில பங்குகளை வாங்க, இது தக்க சமயம்.வாங்கும் பணியை நிதானமாக, சீரான ஆய்வின் அடிப்படையில் செய்வது மட்டுமே நல்லது. இனி, அரசியல் அச்சங்கள் நீங்கிய நிலையில், முதலீட்டு முடிவுகளை நீண்டகால பார்வையுடன் எடுக்க வேண்டியது மிக முக்கியம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|