பதிவு செய்த நாள்
28 மே2019
07:12
புதுடில்லி: வாராக்கடன் தொடர்பாக பெரிய நிதிநிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகளுக்கு அனுப்பிய அறிக்கை விபரங்களை வழங்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய தகவல் ஆணையமான, சி.ஐ.சி., உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2017ல், பெரிய நிறுவனங்களின் வாராக் கடன் தீர்வு தொடர்பான அறிக்கை, வங்கிகளுக்கு அனுப்பியுள்ளதாக, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரல் ஆச்சார்யா தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், லக்னோவைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, நுாதன் தாகூர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசிய தகவல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்தார்.
அதில், வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுப்பியிருந்த வாராக் கடன் நிறுவன தகவல்கள், அவை தொடர்பான கடித விபரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வழங்குமாறு, அவர் கோரியிருந்தார்.
ரகசியம்:
அதற்கு, ‘வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் படி, அவை, ரகசிய விபரங்கள் என்பதால், வாராக் கடன் நிறுவனங்களின் பட்டியலை வழங்க முடியாது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.இது குறித்த, தேசிய தகவல் ஆணையத்தின் பதிலை எதிர்த்து, நுாதன் தாகூர், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவின் விசாரணையில், ‘வாராக் கடன் தீர்வுக்கான நிறுவனங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வந்ததால், மனுதாரர் கேட்ட தகவலை, 2017ல் வழங்க முடியவில்லை.
தற்போது, அந்த விபரங்களை தரத் தயாராக உள்ளோம். ‘அதேசமயம், வாராக் கடன் நிறுவனங்களுடன், பொருளாதார நெருக்கடியால், கடன் தவணை செலுத்தத் தவறிய நிறுவனங்களின் விபரங்களும், அந்த பட்டியலில் உள்ளதால், கடிதப் பரிவர்த்தனை, ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க முடியாது’ என, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதையடுத்து, நுாதன் தாகூர், தேசிய தகவல் ஆணையத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
விசாரணை:
இந்த மனு, இம்மாத துவக்கத்தில், தேசிய தகவல் ஆணையத்தின் ஆணையர், சுரேஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் அளித்த தீர்ப்பு:ரிசர்வ் வங்கியின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். மனுதாரர் கோரிய விபரங்களுடன், இதர கடன்தாரர் தகவல்களும் இணைந்து உள்ளதால், அவை தொடர்பான கடித விபரங்களையும், ஆவணங்களையும் வழங்க, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
வாடிக்கையாளர் தகவலின் ரகசியத்தை காக்க வேண்டியது, வங்கிகளின் கடமை. அதேசமயம், ரிசர்வ் வங்கி, ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, வாராக் கடன் தீர்வு தொடர்பான, பெரு நிறுவனங்களின் பட்டியலை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம் கோடி வசூல்:
பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடனில், 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, பெரிய நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், கடன் மீட்பு நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. திவால் சட்டம் அறிமுகத்திற்கு பின், கடந்த இரண்டு ஆண்டுகளில், 80 சதவீத வழக்குகளில், வாராக் கடன் வசூல், 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|