பதிவு செய்த நாள்
22 ஜூன்2019
06:43
புதுடில்லி: ஜி.எஸ்.டி., கவுன்சில், 35வது கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டம் இது. மேலும்,பொதுத் தேர்தல் முடிந்து, புதிய அரசு அமைந்த பின் நடைபெற்ற முதல் கூட்டமாகும் இது.
இக்கூட்டத்தில், மின்வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைப்பது, ஜி.எஸ்.டி., பதிவுக்கு, ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், ஜி.எஸ்.டி., ஆண்டு வரித் தாக்கலுக்கான அவகாசத்தை, இரண்டு மாதங்கள் அதிகரித்து, ஆகஸ்டு, 30 வரை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நடைமுறை:
ஒரே படிவத்தின் மூலம், ஜி.எஸ்.டி., வரித்தாக்கல் செய்யும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்யவும், முடிவு எடுக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, 2020 ஜனவரி முதல் தேதியிலிருந்து, அமலுக்கு வரும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மின்னணு விலைப்பட்டியல் அமைப்பு, மின்னணு அனுமதி சீட்டு ஆகியவற்றை, ‘மல்டிபிளக்ஸ்’ வணிகங்களில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி., நெட்வொர்க்கில், வணிகங்களை பதிவு செய்ய, ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., பதிவு, மேலும் எளிதாக இருக்கும்.
இக்கூட்டம் குறித்து, வருவாய் துறை செயலர், அஷய் பூஷன் பாண்டே கூறியதாவது: கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று, ஜி.எஸ்.டி., பதிவை சுலபமாக்கியது. இதற்கு முன் பதிவு செய்வதற்காக, பல ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது, ஆதார் அடையாள எண்ணை பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்துவதன் மூலம், வணிகங்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
ஒருவர், ‘ஆன்லைன்’ மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தும்போது, அவருக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும், கடவு எண் தரப்பட்டு, அவரே ஜி.எஸ்.டி.என்., -தளத்தில் பதிவு செய்து, அதற்கான ஜி.எஸ்.டி.என்., பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளலாம். இதனால், அவரவர்களே மிக எளிதாக பதிவு செய்துகொள்ள இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.
முடிவுகள்:
நேற்று நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கியமான முடிவுகள்: மிகை லாப தடுப்பு ஆணையத்தின் பணிக்காலம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகை லாப தடுப்பு ஆணையம், ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன்களை, நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்காமல் இருப்பது குறித்த புகார்கள் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்கும். ஜி.எஸ்.டி., வரிக் குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்களுக்கு, 10 சதவீதம் அளவுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
மின் வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கும் ஆலோசனை, உரிய குழுவுக்கு அனுப்பப்படும். இக்குழுவானது, மின் வாகனங்களுக்கான வரியை குறைப்பதில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் சார்ஜருக்கான வரியை, 18 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக குறைப்பது குறித்தும் முடிவு எடுக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|