பதிவு செய்த நாள்
24 ஜூன்2019
07:11
கடந்த சில வாரங்களாக, தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து, ஐந்து ஆண்டுகளில் இல்லாத, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடான, ‘டொவ் ஜோன்ஸ் இண்டெக்ஸ்’ புதிய வரலாறு படைக்கும் உச்சங்களை ஏற்படுத்தி வருகிறது.
இது, ஒரு விதத்தில் ஆச்சரியமூட்டும் பொருளாதார நிகழ்வு. பங்குச் சந்தை, செலாவணி போன்றவை மதிப்பிழந்து போகும் சூழலில், தங்கத்தின் பக்கம் அதிக முதலீட்டு ஆர்வம் ஏற்படுவது வழக்கம்.தற்போது, இரண்டும் ஒரே சமயம் உயர்வது, நமக்கு இனி வரும் காலங்களில் நடக்கப் போகும் ஏதோ ஒரு நிகழ்வை குறியிட்டுக் காட்டுகிறது.பொதுவாக, சந்தையும் தங்கமும் ஒரே சமயத்தில் ஏற்றம் காண்பது, பொருளாதார அடிப்படையில் முரணான அறிகுறியாகவே தெரிகிறது.சந்தையில், ஒரு புறம் அதிக முதலீட்டு ஆர்வம் தென்பட்டாலும், இன்னொரு புறம், வளரும் சந்தேகங்களும், அச்சங்களும் பலரை தங்கத்தில் முதலீடு செய்ய துாண்டி, அதன் மீது அதிக கவனம் செலுத்த வைத்துள்ளன.
இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடிய, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்த பார்வைகள் மாறுவதன் வெளிப்பாடாகவே, தங்கத்தின் விலை உயர்வை பார்க்க வேண்டும்.அமெரிக்க வளர்ச்சி குறைந்தால், அந்த நாட்டில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய அவசியம், அமெரிக்க மத்திய வங்கிக்கு ஏற்படும்.இதனால், உலக முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை டாலரில் இருந்து, தங்கத்திற்கு மாற்ற வேண்டி வரும். ஒருவேளை, இதனால் டாலர் சரிவை சந்தித்தால், அது, தங்கம் மேலும் விலை கூட வழி வகுக்கும்.இதை நோக்கி உலக நாடுகளின் மத்திய வங்கிகள், நம்முடைய ரிசர்வ் வங்கியைப் போல, மேலும் அதிக முதலீடுகளை தங்கத்தின் பக்கம் செலுத்த வேண்டி வரும்.
இந்த எண்ண ஓட்டம், ஏற்கனவே அவர்களின் முதலீட்டு நடவடிக்கைகளில் தெரிய துவங்கிவிட்டன. ஒவ்வொரு நாட்டின் ரிசர்வ் வங்கியும், தங்கம் வாங்கினால், அதுவே, உலக சந்தையில் தங்கத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கும்.சீனா – அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தகப் போரால், டாலருக்கு ஏதாவது தாக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும், தங்கம் விலையில் ஏற்றம் காண முக்கிய காரணம்.விலை உயர உயர, மேலும் பலர் தங்கம் வாங்க முன் வருவர். இதுவே, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்வடைய செய்யும்.தற்போதைய சூழலில், தங்க சுரங்கங்களில் அதிக முதலீடு ஏற்பட்டு, பல ஆண்டுகளாகி விட்டன. ஆகவே, தங்கத்திற்கான தேவை, குறுகிய காலத்தில் அதிகரித்தால், விலை உயர்வு மேலும் வேகம் பிடிக்கும்.
அமெரிக்காவிற்கும், ஈரான், சீனா போன்ற நாடுகளுக்கும் இடையே, வர்த்தக சர்ச்சைகள் தொடர்ந்தால், அதுவும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும்.இப்படி பல வகையான உலக நிகழ்வுகள், தங்கத்தின் விலை உயர வழிவகுக்கக் கூடிய சூழலை உருவாக்கிவிட்டன. இந்த சூழல் எப்படி மாறுகிறது என்பதை, முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.முதலீட்டு ஆர்வம் அதிகரித்து, முதலீட்டு பார்வை தொடர்ந்து சாதகமாக இருக்கும் பட்சத்தில், தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களை தொடும் என்பதே, இப்போதைய சூழல் சார்ந்த கணிப்பு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|