பதிவு செய்த நாள்
24 ஜூன்2019
07:14
மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 2019 – 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்கு, 10 நாட்கள் தான் இருக்கின்றன.
கடந்த சனிக்கிழமை, பட்ஜெட் அச்சடிக்கும் பணியின் துவக்கமாக, ‘அல்வா கிண்டும்’ நிகழ்ச்சி நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம்பெறப் போகும் அம்சங்கள் குறித்து, பல்வேறு யூகங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
தர்க்கம்:
வழக்கமான எதிர்பார்ப்புகளை மீறி, இம்முறை மூன்று அம்சங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவை, பட்ஜெட்டில் வரப் போகின்றனவா என்பது, ஜூலை, 5ம் தேதியன்று தெரிந்து விடும். ஆனால், இவற்றுக்குப் பின்னேயுள்ள தர்க்கம் ஏற்கத்தக்கதாக தோன்றுகிறது. உதாரணமாக, ‘காலிமனை வரி’ வரப் போவதாக பேச்சு இருக்கிறது. பல நிறுவனங்களும், தனிநபர்களும் ஏராளமான நிலங்களை வளைத்துப் போட்டு, சும்மா வைத்து இருக்கின்றனர்.
பொதுவாக, வீடு கட்டுவதற்கு என்று குறிக்கப்பட்ட நிலங்கள் உண்டு. விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்கள் உண்டு.அடுக்குமாடி குடியிருப்புகளையோ, வீடுகளையோ கட்டாமல், பல இடங்கள் வெறுமனே கிடக்கின்றன. விவசாயம் செய்யப்படாத நிலங்களும் அப்படியே கிடக்கின்றன. நிலங்களை இப்படியே விட்டு வைப்பதற்கு, ஒரு காரணம் இருக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களுக்கு, இப்படிப்பட்ட நிலங்கள் தான் மிகப்பெரும் சொத்து.‘லேண்ட் பேங்க்’ என்றே குறிப்பிட்டு, அதற்கு ஒரு தோராய மதிப்பைச் சொல்லி, அதை நிறுவனத்தின் சொத்தாக காண்பிக்கும் பழக்கம் இருக்கிறது.
சரிவு:
நிறுவனம் லாபம் பார்க்கிறதோ, இல்லையோ, நிலத்தின் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கையில், நிறுவனப் பங்குகளின் விலைகளுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.இனிமேல், நிலம் சும்மா இருந்தாலும், அதற்கு வரி விதிக்கப்படுமாம். ஆண்டுதோறும், ‘காலிமனை வரி’யாக அதன் வழிகாட்டு மதிப்பில், 6.5 சதவீதம் வரி விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இதன் மூலம் பல விஷயங்கள் நடைபெறும். புரமோட்டர்களோ, நிறுவனங்களோ நிலத்தை சும்மா வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவர் அல்லது வேறொருவருக்கு விற்றுவிடுவர்.
நிலத்தில் முதலீடு செய்து, நீண்டகால அளவில் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் எண்ணத்திலும் மண் விழும். காலி மனைக்கு வரி கட்டுவதை விட, அதை விற்பனை செய்துவிடவே பலர் விரும்புவர். இதனால், அடுத்த எட்டு முதல் ஒன்பது மாதங்களில், நிலத்தின் மதிப்பு, 18.6 சதவீதம் அளவுக்கு சரிவடையும். ஒருபக்கம் குத்தகைக்கு விவசாயம் செய்ய விரும்புவோர், இந்த நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நிறுவனங்களும் இனிமேல் காலி மனைகளை சொத்தாக காண்பிக்க முடியாது. அதன் மீதான வரி, ஒரு முக்கிய செலவு. அதனாலேயே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
எதிர்பார்ப்பு:
பட்ஜெட்டை ஒட்டி, இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்படலாம். எப்படி எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியங்களை விட்டுக் கொடுக்கச் சொல்லி, 2014ல் ஒரு திட்டத்தை பிரதமர் அறிமுகம் செய்தாரோ, அதேபோல், ரயில்வே துறையும் மானியங்களை விட்டுக் கொடுக்கச் சொல்லி கேட்கப் போகிறது.
விலை மலிவு:
இந்திய ரயில்வே வசூலிக்கும் ரயில் கட்டணத்தில், 47 சதவீத மானியம் உள்ளது. நாம் உண்மையில் செலுத்துவது, 53 சதவீத கட்டணம். அதனால் தான், ரயில் கட்டணங்கள் பல தடங்களில், பேருந்து கட்டணங்களை விட மிகவும் விலை மலிவாக இருக்கின்றன. இந்நிலையில், மானிய சலுகையை விட்டுக் கொடுக்கும்படி, மக்களைக் கோரலாம் என்ற ஆலோசனையை, ரயில்வே துறை, மத்திய அரசுக்கு வைத்துள்ளது.இது, நடைமுறைக்கு வருமானால், டிக்கெட் விற்பனையில் தற்போது வசூலாகும், 50 ஆயிரம் கோடி ரூபாய், 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
சுரேஷ் பிரபு, முன்பு ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, இந்த ஆலோசனையை பரிசீலைனை செய்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இம்முறை, இத்திட்டம் ஏற்கப்படலாம். விருப்பப்பட்டோர் தான், மானியங்களை கைவிடப் போகின்றனர். எல்லாரும் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தல் இருக்காது. மூன்றாவதாக, ஒரு திட்டம் கருத்தளவில் இருக்கிறது. ஓராண்டில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக பணம் எடுப்பவர்களுக்கு, 3 முதல், 5 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்ற செய்தி உலவுகிறது.
கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கவும், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தவும் இம்முறை அறிமுகம் செய்யப்படலாம். ஆண்டொன்றுக்கு, 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை வரி கட்ட வேண்டும் என்பது, ஒரு தண்டச் செலவு; அதைத் தவிர்க்கவே பார்ப்பர். இதன் மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகும். ரொக்கமில்லா பொருளாதாரத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.பெருமளவில் பணத்தை எடுக்கும்போது, ‘ஆதார்’ அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறையும் அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றனர்.
அறிமுகம்:
இவையெல்லாம் தற்போது வரை உறுதிப்படுத்தப்படாத செய்திகள். உண்மையில், இத்தகைய முயற்சிகளில் சாதகமும் உண்டு, சிரமங்களும் உண்டு. மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றுள்ள பா.ஜ., அரசு, மத்தியமர்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டு, சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய வேண்டும். அவை முன்னேற்றத்துக்கு வழி செய்வதாக இருந்தால் தான், மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்பர்.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|