பதிவு செய்த நாள்
09 ஆக2019
00:20
புதுடில்லி:இந்திய தொழில் துறையில், முதலீட்டு சுழற்சியை ஏற்படுத்தவும், வளர்ச்சியை உருவாக்கவும், 1 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்குமாறு, மத்திய அரசிடம் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன், தொழில் துறை வளர்ச்சி குறித்து, இத்துறையைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து, நேற்று பேச்சு நடத்தினார்.மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தொழில் துறையில், முதலீட்டு சுழற்சியை ஏற்படுத்தவும், வளர்ச்சியை அதிகரிக்கவும், 1 லட்சம்கோடி ரூபாய் ஊக்கத் தொகையை, அரசு வழங்க வேண்டும் என, தொழில் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியைஅதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை, விரைவில் எடுப்பதாக, அரசாங்கம் உறுதி அளித்துள்ளது என, சந்திப்புக்குப் பின், தொழில் துறை தலைவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பி.கே.கோயங்கா, தலைவர், அசோசெம்:
தற்போது ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு, விரைவான தீர்வுகளை எடுக்க வேண்டியது அவசியம். அதனால், 1 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கலாம் என, நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
சஜ்ஜன் சிங்கால், ஜெ.எஸ்,டபிள்யு குழுமம்:
இந்த சந்திப்பில், தொழில் துறையின் மந்த நிலையை மீட்டெடுக்க, தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பது குறித்து பேசப்பட்டது.உருக்கு, வாகனம், வங்கி சார நிதி நிறுவனங்கள் ஆகிய துறைகளின் நிலை குறித்தும் தெரிவித்தோம்.இதற்கு சாதகமான பதில்களை நிதியமைச்சர் தெரிவித்தார்.மேலும், பிரச்னைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
அஜய் பிரமால், தலைவர், பிரமால் எண்டர்பிரைசஸ்:
தொழில்கள் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது உள்ளிட்ட பல பிரச்னைகள் முன்வைக்கப்பட்டன.வங்கிகளில் பணப்புழக்கம் இல்லை என்பதல்ல; கடன் வழங்கப்படுவது இல்லை என்பது குறித்தே சொன்னோம். வங்கி சாரா நிதி நிறுவனங்களால், பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் நிலை குறித்தும் எடுத்துச் சொன்னோம்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களால், வாகனக் கடன், வீட்டுக் கடன், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சொன்னேன். அதனால், பொறுத்திருந்து பார்க்கலாம்.மேலும், நிறுவன சட்டத்தின் கீழ், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்புணர்வு குறித்த விஷயங்களில், சிறைத் தண்டனை கூடாது எனவும் கோரப்பட்டது.
டி.வி., நரேந்திரன், துணைத் தலைவர், சி.ஐ.ஐ.,:
சந்திப்பில், முக்கியமான பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். வாகன துறையில் ஏற்படும் மந்தநிலை உருக்கு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் பேசப்பட்டன.
சந்தீப் சோமானி, தலைவர், பிக்கி:
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்றாலும், அதன் பலனை, வங்கிகள், நுகர்வோருக்கு வழங்குமாறு செய்யவேண்டும். ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்திருப்பது ஊக்கம் அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|