பதிவு செய்த நாள்
20 ஆக2019
07:00
மும்பை : ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித அறிவிப்புக்கு ஏற்ப, ’ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ உள்ளிட்ட பல வங்கிகள், தாமாக முன்வந்து, தங்களது கடன் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டியை மாற்றி அமைத்துள்ளன.
‘இந்நிலையில், அனை த்து வங்கிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்; இதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்,’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மே மாதத்திலிருந்து டெப்பாசிட்டுகளுக்கான வட்டியையும், ஜூலை மாதத்திலிருந்து வீட்டுக்கடனுக்கான வட்டியையும், ரிசர்வ் வங்கி அறிவித்த, ரெப்போ வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாற்றி அறிவித்தது. எஸ்.பி.ஐ., வங்கியை தொடர்ந்து, கடந்த வாரம், பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட ஆறு முக்கியமான வங்கிகள், வட்டியை மாற்றி அறிவித்துள்ளன.
அவகாசம் - வங்கிகள் மோசமான நிதி நிலையில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்குமாறு அழுத்தம் கொடுக்காத நிலையிலும், இந்த வங்கிகள் வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டில் மட்டும், 1.10 சதவீதம் அளவுக்கு, ரெப்போ வட்டியை குறைத்து அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முக்கியமான, ஆறு பொதுத் துறை வங்கிகளும், வட்டியை குறைத்துள்ளன.
இதனால், வாராக் கடன் பிரச்னையில் சிக்கியிருக்கும் வங்கிகள், அவற்றிலிருந்து மீள்வதற்கு, அவகாசம் வேண்டும் என்ற வாதமும் இனி தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில், ’பிக்கி’ அமைப்பு நடத்திய, வங்கிகள் ஆண்டு மாநாட்டில் பேசிய, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப, வங்கிகள், விரைவாக தங்களது வட்டிவிகிதங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வங்கிகளிடமிருந்து நாங்கள் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.
ரெப்போ வட்டிக்கு ஏற்ப, வங்கிகளும் வட்டியை மாற்றிக் கொள்ளவதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.நாங்கள் இது குறித்து கண்காணித்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும்.வங்கிகளுடன் பணியாற்றுவதில், ரிசர்வ் வங்கி ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்து, என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்.சந்தையில் சாதகமான மாற்றங்கள் தெரிகிறது. அதற்கு ஏற்ப வங்கிகளும் நடந்துகொள்கின்றன. தற்போது, அவை ரெப்போ வட்டிக்கு ஏற்ப புதிய கடன்களுக்கு தங்களது வட்டியை நிர்ணயிக்க துவங்கி உள்ளன.
ஸ்திரத்தன்மை இருப்பினும், இது, இன்னும் வேகமாக நடைபெற வேண்டும். இன்றைய பொருளாதார நிலை, நிதிக் கொள்கையை மட்டும் எதிர்பார்க்கவில்லை, அதன் அறிவிப்புகள், வேகமான பரிமாற்றம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.எனவே, வங்கிகள், வட்டி விஷயத்தில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். எதிர்மறையான எண்ணங்கள் யாருக்கும் உதவப்போவதில்லை. நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம்.
அனைவருடைய முன்னுரிமையும், வளர்ச்சிக்கானதாகவே இருக்க வேண்டும். பணப்புழக்க பிரச்னை மட்டுமே வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்காது. உலகளவிலான வங்கி அமைப்பு, இப்போது இடர்பாடுகளை அதிகம் தாங்கும் வண்ணம் உள்ளது. நீண்டகால வளர்ச்சிக்கு, நிதி ஸ்திரத்தன்மை மட்டுமே தீர்வாக இருக்கும்.பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்ததைவிட குறைவாக, மந்த நிலைக்கான அடையாளங்களுடன் இருக்கிறது.
இவை உலகின், நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக இருக்கும்.வங்கிகள் அரசாங்கத்தை எதிர்பார்த்திருப்பதை விட, சந்தையிலிருந்து மூலதனத்தை திரட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கான உண்மையான சோதனை.திவால் சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பது, வங்கி துறையை பாதுகாக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|