பதிவு செய்த நாள்
22 அக்2019
03:02
புதுடில்லி : அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது, மேலும் தாராளமாக்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீடு மூலமாக, மேலும் அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.குறிப்பாக, வேறு எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.மேலும், தானியங்கி முறை எனப்படும், முன் அனுமதியின்றி செய்யப்படும் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
தானியங்கி முறையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சில வகை முதலீடுகளை மேற்கொள்வதற்கு, இந்திய அரசிடமிருந்தோ அல்லது ரிசர்வ் வங்கியிடமிருந்தோ எந்த முன் அனுமதியும் பெற வேண்டியதில்லை.இது குறித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீபத்தில் நிலக்கரி, சுரங்கம், சிங்கிள் பிராண்டு சில்லரை விற்பனை, ஒப்பந்த உற்பத்தி, ‘டிஜிட்டல் மீடியா’ உள்ளிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் நிதியமைச்சகமும், காப்பீட்டு வணிக பிரிவுகளுக்கான விதிமுறைகளை மாற்றியது. இந்நிலையில், எந்தெந்த துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்பது குறித்தும், அத்துறைகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது குறித்தும், தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறை ஆராய்ந்து வருகிறது.இந்த பட்டியல் தயாரான பின், அவை உரிய அமைச்சகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.விமான போக்குவரத்தை பொறுத்தவரை, இந்த துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இருப்பினும், உரிமை மற்றும் கட்டுப்பாடு குறித்த விதிமுறைகளில் சில இடையூறுகள் உள்ளன. இது குறித்து, விமான போக்குவரத்து துறை இன்னும் முடிவுக்கு வரவில்லை.கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பிடத்தகுந்த அளவுக்கு, அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த விதிமுறைகளை அரசு தளர்த்தி வந்துள்ளது.பாதுகாப்பு, தொலை தொடர்பு போன்ற மிகச் சில துறைகளில் மட்டுமே, 49 சதவீதத்துக்கு அதிகமான அன்னிய நேரடி முதலீட்டுக்கு, அரசின் முன் அனுமதி தேவைப்படுகிறது.
தனியார் செக்யூரிட்டி ஏஜன்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் மருந்துகள் துறை, பயோ டெக்னாலஜி போன்ற துறைகளில், 74 சதவீதத்துக்கும் மேலான அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, முன் ஒப்புதல் தேவைப்படுகிறது.லாட்டரி, சூதாட்டம், பந்தயம், சிட் பண்டுகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், அணுசக்தி மற்றும் ரயில்வே உள்ளிட்ட ஒன்பது துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|