பதிவு செய்த நாள்
23 அக்2019
07:01
புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ‘நெறிமுறை கொண்ட ஊழியர்கள்’ என்ற பெயரில், ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது. இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2.76 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.நிறுவனத்தின் இரண்டு உயரதிகாரிகள் மீது, ஒரு குழுவினர் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் நடைமுறைப்படி இந்த புகாரானது தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, இப்புகார் மீது தனிக்கை குழு சுதந்திரமான விசாரணையை நடத்தும் என தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தைமதிப்பு சரிந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வர்த்தகத்தினிடையே மீண்டும், 9 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மதிப்பு, 8.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|