பதிவு செய்த நாள்
11 நவ2019
00:00
பங்குச் சந்தையில், வெற்றிக்கு நாம் தரும் முக்கியத்துவம் அதிகம். இந்த போக்கு, சமீப வெற்றி சிந்தனைகளுக்கு, நம்முடைய மனதில் அதிக இடமளிக்கச் செய்கிறது. சமீப கால வெற்றியை, நாம் அளவுக்கு அதிகமாக மதிப்பதும், இதன் வெளிப்பாடு தான். அதே சமயம், நாம் சமீப கால தோல்விகளை நிராகரிப்பதும், இந்த போக்கின் விளைவு தான்.
ஆனால், காலப்போக்கில், தோல்வியில் இருந்து வெற்றி உதிப்பதும், வெற்றி, தோல்வியாக மாறுவதும் தான் கடந்த கால வரலாறு. இது பலருக்கு நன்றாக தெரிந்தும் கூட, வெகு சிலர் மட்டுமே, மாற்று சிந்தனைகளை ஏற்க துணிகின்றனர்.
மாற்று சிந்தனைகள் மற்றும் எதிர்மறை முதலீட்டு சித்தாந்தங்கள் சார்ந்த முதலீட்டு அணுகுமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கின்ற முதலீட்டாளர்கள், இதில் தேர்ந்தவர்கள். இருந்தும், முதலீட்டு உலகில், எதிர்மறை சிந்தனைகள் எளிதில் ஏற்கப்படுவதில்லை. எதிர்மறை சிந்தனைகள், சந்தையால் நிராகரிக்கப்படுவதோடு, ஏளனத்திற்கும் உட்படுத்தப்படுவது சகஜம்.
யாருமே பார்க்க விரும்பாத துறைகளிலும், நிறுவனங்களிலும், முதலீட்டு வாய்ப்புகளை தேடுவதும், அந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி சார்ந்த எதிர்பார்ப்புகளை சரியாக கணிப்பதும், ஒரு விதத்தில், முதலீட்டு வாழ்க்கை முறை சார்ந்ததே ஆகும்.
சந்தையில், அனைத்து தரப்புகளாலும் கொண்டாடப்படும் முதலீட்டு தேர்வுகள், தொடர்ந்து மதிப்பு கூடிக்கொண்டே போகும் தருணத்தில், யாருமே பார்க்கக் கூட விரும்பாத துறைகளையும், நிறுவனங்களையும், தொடர்ந்து ஆய்வு செய்வதும், அவற்றில் முதலீட்டு வாய்ப்பு தேடுவதும், வெகு சிலரால் மட்டுமே முடியும்.
கடந்த ஓராண்டில், சந்தையில் பெரும்பான்மையான முதலீட்டு பார்வைகள், ஏகோபித்த வெற்றி கண்ட வெகு சில பங்குகளை மட்டும் சார்ந்தே இயங்குவது, மாற்று சிந்தனைகளை ஓரம் கட்டும் விதமாகவே அமைந்தது. இந்த போக்கு, உச்சத்தை தொட்டு விட்டதாகவே தோன்றுகிறது.
இனி வரும் காலகட்டத்தில், மாற்று சிந்தனைகள், படிப்படியாக ஏற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. மாற்று சிந்தனைகளை ஆய்வு செய்யத் துவங்க, இது தக்க தருணம் என்றே தெரிகிறது. மாற்று சிந்தனையாளர்கள் என்ன சொல்கின்றனர் என்று, கூர்ந்து கவனியுங்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|