பதிவு செய்த நாள்
13 டிச2019
00:00
கோவை:‘‘எல்.ஐ.சி., நிறுவனம் இந்தாண்டில் மட்டும் பங்குச் சந்தை முதலீடுகளின் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது,’’ என்று, அதன் நிர்வாக இயக்குனர் சுசீல் குமார் தெரிவித்தார்.
எல்.ஐ.சி., நிர்வாக இயக்குனர் டி.சி.சுசீல் குமார், கோவையில் நேற்று, ‘தினமலர்’ நாளிதழுடன் தன் கருத்துகளை பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்:
எல்.ஐ.சி., நிறுவனம், 29 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்தாண்டு, 2.5 கோடி பாலிசிகள் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; 57 ஆயிரம் கோடி ரூபாய் முதல் பிரிமியம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், நவ., 30 வரை அனைத்து இலக்குகளிலும், 55 முதல், 60 சதவீதம் வரை அடைந்து விட்டோம்.வழக்கமாக பிப்ரவரி, மார்ச்சில் தான் பாலிசி விற்பனை அதிகம் இருக்கும். எனவே, இந்தாண்டில் இலக்கை நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கை, 100 சதவீதம் உள்ளது.
சந்தை பங்களிப்பு
நவம்பரில் மட்டும் இந்தியாவில், 40 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசிகளை, அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் விற்றுள்ளன. இதில், 34 லட்சம் பாலிசிகள், அதாவது, 85 சதவீதம் பாலிசிகளை, எல்.ஐ.சி., மட்டுமே விற்றுள்ளது. செப்டம்பர், அக்டோபர், நவம்பரில், சதவீதம் அடிப்படையில், எல்.ஐ.சி., சந்தை பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.செப்டம்பரில், 73 சதவீதமாக இருந்த சந்தை பங்களிப்பு, அக்டோபரில், 78 சதவீதமாகவும், நவம்பரில், 85 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு, எல்.ஐ.சி., பணியாளர்களின் கடின உழைப்பும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் முக்கிய காரணம்.எல்.ஐ.சி., ‘போனஸ்’ எப்போதும் குறைந்ததே இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 1 ரூபாய் கூட போனஸ் குறைக்கப்பட்டதில்லை. இந்தாண்டு, 53 ஆயிரம் கோடி ரூபாய் போனஸ் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டுள்ளது.எல்.ஐ.சி., நிறுவனம், அரசு திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு என பல்வேறு விதங்களில் முதலீடு செய்கிறது. பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை.
இந்தாண்டு மட்டும், பங்குச் சந்தை முதலீடுகளின் மூலம், எல்.ஐ.சி., நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.எல்.ஐ.சி., நிதியில், 50 முதல், 60 சதவீதம் மத்திய – மாநில அரசு திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு திட்டங்களில் மட்டும், 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தாண்டில் மட்டும், 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில், எல்.ஐ.சி., முதலீடு செய்துள்ளது. ஒரு வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணையும்போது ஏற்படும் உந்து சக்தியால், பெரும் முன்னேற்றம் ஏற்படும். அந்த வகையில், ஐ.டி.பி.ஐ., இப்போது சரியான பாதைக்கு வந்து கொண்டிருக்கிறது.இதுவரை, அந்த வங்கி சார்பில், 400 கோடி ரூபாய் எல்.ஐ.சி., பிரிமியம் வசூலிக்கப்பட்டுள்ளது; 50 ஆயிரம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதினர், பழைய நிறுவனங்களை தேடி வர மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால், எல்.ஐ.சி., நிறுவனம், அந்த கருத்தை முறியடித்துள்ளது.இந்தாண்டில் அக்டோபர் வரை, எல்.ஐ.சி., பாலிசி எடுத்த ஒரு கோடி பேரில், 42 லட்சம் பாலிசிதாரர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
டிஜிட்டல் முயற்சி
எங்களது சிறப்பான பாலிசி திட்டங்கள், ஆன்லைன் பிரிமியம் கட்டுவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பாலிசி பணம் கட்டுவது, எல்.ஐ.சி., இ – சர்வீஸ் என எங்களது டிஜிட்டல் முயற்சிகள், இளம் வயதினரை கவர்ந்திழுக்கின்றன.
எங்களது, ‘கிளெய்ம் செட்டில்மென்ட்’ மிகச் சிறப்பாக உள்ளது.தேசிய பேரழிவுகளின் போது, எல்.ஐ.சி., தானாக முன்வந்து இழப்பீடு வழங்குகிறது. கேரளா, ஒடிசா மாநிலங்களில் வெள்ளம் பாதித்த காலங்களில், எல்.ஐ.சி., தானாக முன்வந்து, உடனுக்குடன் இழப்பீடு வழங்கியது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கர்நாடகா, மத்துாரைச் சேர்ந்த ஒரு வீரரும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்.அந்த வீரர் உடல் வீடு வருவதற்கு முன், கிளை எல்.ஐ.சி., மேலாளர் இழப்பீடு காசோலையுடன் அந்த வீட்டுக்கு சென்று விட்டார். அது போன்ற நடவடிக்கைகளால் தான், எல்.ஐ.சி., மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது.இவ்வாறு சுசீல் குமார் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|