பதிவு செய்த நாள்
16 டிச2019
00:20
ஏராளமான பொருளாதார தகவல்கள் வந்து கொண்டிருக்கும் தருணத்தில் தான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த வெள்ளியன்று ஊடகங்களைச் சந்தித்தார். அவர் சொன்னது என்ன? ஏற்படுத்திய உணர்வு என்ன?
இரண்டு மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ஊடகங்களைச் சந்தித்து, பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தெரிவித்தார், நிதிஅமைச்சர். அதன் பின், கடந்த வெள்ளியன்று தான் சந்தித்தார்.இதற்குள் விதவிதமான யூகங்களும், தகவல்களும் பரவின. அரசாங்க புள்ளி விபரங்களும் வெளிவந்தன.
சமீபத்தில் வெளிவந்த, நவம்பர் மாதத்துக்கான சில்லரை பணவீக்கம், 5.54 சதவீதமாக இருந்தது. சென்ற ஆண்டு, இதே நவம்பரில், 2.33 சதவீதமாக இருந்தது. தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்கமும், 10.01 சதவீதத்தை தொட்டுஉள்ளது.பொருளாதார அறிஞர்கள், இந்திய பொருளாதாரம், ‘தேக்கநிலை’யை அடைந்திருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர்.
தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக, ஏற்றுமதி குறைந்திருக்க, இறக்குமதியும் ஆறு மாதங்களாக சரிந்திருக்கிறது.தர நிர்ணய அமைப்பான, எஸ்., அண்டு பி., இந்தியாவின் முதலீட்டுத் தரத்தைக் குறைத்துவிடுவோம் என்று மிரட்டியது. ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.1 சதவீதம் தான் இருக்கும் என, கணித்தது.ஏற்கனவே, நம், ஆர்.பி.ஐ.,யின் பணக்கொள்கைக் குழு, வளர்ச்சி விகிதத்தை, 5 சதவீதமாகக் குறைத்துவிட்டது.
வாராக்கடன்
இன்னொரு செய்தியும் நம் கவனத்தைக் கவர்கிறது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் சரிவால், வங்கிகளின் வாராக்கடன்கள் மென்மேலும் உயரும் என்று எச்சரித்திருக்கிறது, இன்னொரு தர நிர்ணய நிறுவனமான, மூடீஸ்.எல்லாவற்றுக்கும் மேல், ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் உயரப் போகின்றன என்ற பேச்சும் பலமாக அடிபடத் தொடங்கியது.இத்தகைய தகவல்கள், புள்ளிவிபரங்கள், யூகங்களுக்கு மத்திய அரசு என்ன பதில்களை வைத்திருக்கிறது என்று அறிய ஆவலாக இருந்தது.
அந்த நிலையில்தான், நிதியமைச்சர், ஊடகங்களைச் சந்தித்தார்.முதலில் பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன், முன்வைத்த ஏராளமான புள்ளி விபரங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. முக்கியமாக, அரசாங்கத் தரப்பில் இருந்து வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில், 60 சதவீதத்துக்கு மேல் வழங்கப்பட்டுவிட்டது என்றார்.
அரசாங்க மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகை ஏற்கனவே செலவழிக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் தேவைப்படும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதத்தோடு தொடர்புடைய வீட்டுக்கடன்கள், எட்டு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களில், 31 பில்லியன் டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு, இந்த ஆண்டு, 35 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது.சுப்பிரமணியன் கொடுத்த தகவல்களுக்குப் பின்னர், நிதியமைச்சர் கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கினார்.
எதிர்பார்ப்பு
உண்மையில் நம், ஜி.டி.பி., 4.5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், இவர் மேலும் சலுகைகளையோ, வேறு திட்டங்களையோ அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அவர் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்ட விதம், நிதானமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் பற்றி எந்தவிதமான யூகங்களையும், கணிப்புகளையும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார்.
ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்தினார். ஜி.எஸ்.டி., விகிதங்கள் உயரக்கூடும் என்ற பேச்சு, பொதுவெளியில் மட்டுமே இருக்கிறது. நிதித் துறைக்குள் அது பற்றி எந்தப் பேச்சும் இல்லை என்று விளக்கினார்.ஆனால், எந்த ஒரு காரணத்துக்காக இந்தச் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ, அது நிறைவேறவில்லை.
பொருளாதார தேக்கநிலை பற்றி வெளிவரும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, மிகைப்படுத்தப்பட்டவை, நம்பவேண்டாம், தைரியமாக இருங்கள். எந்தெந்த துறைகளில் எந்தெந்த விதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால், வேலையிழப்பு பற்றியோ, பொருளாதார பாதிப்பு பற்றியோ பயப்பட வேண்டாம் என்ற உற்சாக டானிக்கைத்தான் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், நடந்ததோ வேறு. ஏற்கனவே, பணக்கொள்கைக் குழுவின் சந்திப்புக்குப் பின்னர், ஆர்.பி.ஐ., கவர்னர், ஊடகங்களைச் சந்தித்தார்.
நிதானம்
அவர், இந்தியாவின் பொருளாதார நிலையை உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டு, தாங்கள் மேற்கொண்ட ரெப்போ விகித தளர்வு, மக்களிடம் போய்ச் சேரட்டும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி யோசிப்போம் என தெரிவித்தார்.அவர் குரலில் தொனித்தது, எச்சரிக்கை மிகுந்த நிதானம்.செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டோம், இனிமேல் அவை பலனளிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என, ‘வெயிட் அண்டு வாட்ச்’ மனநிலை தான் அன்று வெளிப்பட்டது.
தற்போது, நிதியமைச்சர் குரலில் கேட்டதும் அதே அணுகுமுறை தான். கொடுத்த மருந்து வேலை செய்யும் வரை காத்திருப்பது போன்றதா இது? உடலுக்குச் சரி, பொருளாதாரத்துக்கும் இதுதான் நிலையா?பலன் தருமா, ‘வெயிட் அண்டு வாட்ச்’ அணுகுமுறை?
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|