பதிவு செய்த நாள்
27 ஜன2020
04:59
பிப்ரவரி, 1ம் தேதி, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர்களான நம் எதிர்பார்ப்புகள் என்னென்ன? அவை நிறைவேற வாய்ப்புள்ளதா?
இன்றைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, மக்கள் கையில் பணம் இல்லை என்பதுதான். குறிப்பாக, மத்தியமர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். கடந்த, 2018ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, சுயதொழில் செய்பவர்கள், தம் வருவாயில், 25 சதவீதம் மட்டுமே வருமான வரி செலுத்த, மாத சம்பளக்காரர்களோ, 75 சதவீதம் வரை வரி கட்டுகின்றனர்.இவர்கள் மீது இம்முறை, மத்திய அரசு கருணை காட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தைத் முதுகில் சுமக்கும் கழுதைகள். என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
வருமான வரிக்கான அடுக்குகளில், தற்போது, 2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம். இந்த வரம்பு, 5 லட்சமாக உயர்த்தப்படலாம். 5 முதல், 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 10 சதவீத வரியும், 10 முதல் 20 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 20 சதவீத வரியும், அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு, 25 சதவீத வரியும் விதிக்கலாம்.மொத்த கணக்குகூடுதலாகச் சம்பாதிப்பவர்களுக்கு, ஏற்கனவே பல்வேறு கூடுதல் வரிகள் வேறு விதிக்கப்படுவதால், 25 சதவீதம் மட்டுமே போதுமானது.
கூடுதல் வரிகள் கூடுதல் வசூலைச் செய்துவிடும்.அடுத்து, நிலையான கழித்தல், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த பயணப்படி மற்றும் மருத்துவ செலவை திரும்ப பெறுவது ஆகியவை இதனுள் இணைத்தே, நிலையான கழித்தல் கொண்டுவரப்பட்டது. தற்போது, பயணச் செலவுகள் எல்லாம் எங்கோ உயரத்தில் பறக்கின்றன. அதனால், இந்த இனத்திலும் வரம்பு உயர்த்தப்பட வேண்டும். 75 ஆயிரம் வரை, இந்த நிலையான கழித்தல் இருப்பதே உசிதமானது.
அடுத்து வருபவை கழித்தல் இனங்கள். 80சி பிரிவு. இதில் தற்போது, 1.5 லட்சம் ரூபாய் வரைதான் கழிக்க முடியும். அதுவும் அத்தனை செலவுகளையும் இதற்குள் அடக்கி, கூடுதலாக மியூச்சுவல் பண்டுகளிலும் தேசிய சேமிப்புப் பத்திரங்களிலும் செய்யப்படும் சேமிப்புகளையும் உள்ளடக்கி, மொத்தமாக கணக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில், செலவுகளும் சேமிப்புகளும் தனித்தனியே கணக்கிடப்பட வேண்டும். அதற்கேற்ப வரிபிடித்தத்தில் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், 1.5 லட்சம் என்பது போதவே போதாது. குறைந்தபட்சம், 3 லட்ச ரூபாய் வரையேனும், வருமானத்தில் கழிக்க வழிசெய்ய வேண்டும்.மற்றொன்று 80டி. அதாவது, மருத்துவ காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகைக்கு வழங்கப்படும் விலக்கு. இது வெறும், 25 ஆயிரம் ரூபாய் வரை தான் இருக்கிறது. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு காப்பீடு செய்தாலே, பிரீமியம் எகிறுகிறது. முன்னெச்சரிக்கை உடல்நல பரிசோதனைக்கும் காப்பீடு அவசியமாகியுள்ள சூழல். இவற்றைக் கவனத்தில் கொண்டால், நிச்சயம் இந்த இனத்தில் விலக்கு, 50 ஆயிரம் வரை வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கே வர நேரிடும்.
மீண்டும் உள்கட்டுமானத்தில் முதலீடு செய்யும், ‘இன்ப்ராஸ்ட்ரக்சர்’ பாண்டுகள் அறிமுகம் செய்யப்படலாம். 2010- – 11, 2011 – 12 நிதியாண்டுகளில் இந்த பாண்டுகள் இருந்தன. பலன் பெற முடியும்இவற்றை மீண்டும் அறிமுகம் செய்து, அதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கழிவு வழங்கலாம். இந்த முதலீடு, பல்வேறு அரசுத் துறை திட்டங்களுக்குப் பயனாகக் கூடும்.அடுத்தது, வீட்டுக் கடன்கள். இதில் செலுத்தப்படும், வட்டிக்கு, 2 லட்சம் வரை கழிவு வழங்கப்படுகிறது.
மூலதனத்துக்கோ, 1.5 லட்சம் வரை கழிவு. உண்மையில், இங்கே நிலைமையே வேறு. கடன் வாங்கும் ஆரம்ப கட்டத்தில், வட்டியின் பகுதி அதிகமாகவும், பிரின்சிபல் தொகை குறைவாகவும் தான் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், எந்தவிதமான பலனையும் வாடிக்கையாளர்கள் பெற முடியவில்லை. இங்கே, வட்டிக்கான கழிவு, 3 லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும்.45 லட்ச ரூபாய்க்குள் இருப்பவற்றையே, தற்போது சகாய விலை வீடுகள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.
பெருநகரங்களில் மட்டுமல்ல, இரண்டாம் நிலை நகரங்களில் கூட, இந்த விலைக்கு, வீடுகள் கிடைக்க மாட்டேன் என்கின்றன. உண்மையில், சகாய விலை வீடுகள் என்பவற்றுக்கான அடிப்படை மதிப்பை, 80 லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால் தான், மத்தியமர்கள் பலன் பெற முடியும்.வங்கி முதலீடுகள், அஞ்சலக முதலீடுகள், பாண்டுகளில், முதியவர்கள் முதலீடு செய்து, அதில் இருந்து பெறும் வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை விலக்கு வழங்கப்படுகிறது.
இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் வழங்குவது பயனுடையதாக இருக்கும். இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களும் மத்தியமர்களும் கையில் உபரி பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர். இவர்கள் கையில் கொஞ்சம் பணம் சேர, மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதன்மூலம், சுபிட்ச உணர்வு ஏற்படும், மீண்டும் பல்வேறு பொருட்களை வாங்கி, பொருளாதார சுழற்சிக்கு இவர்கள் உதவுவர். நிதி அமைச்சர் கண் திறப்பாரா?
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|