பதிவு செய்த நாள்
12 பிப்2020
23:30
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு, கடந்த டிசம்பர் மாதத்தில், 0.3 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி குறியீடு, 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நவம்பர் மாதத்தில், 1.8 சதவீதமாக இருந்தது.இந்த சரிவுக்கு, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்ததே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டில், நான்கில் மூன்று பங்கு வகிக்கும், தயாரிப்பு துறை உற்பத்தி, டிசம்பர் மாதத்தில், 1.2 சதவீதமாக சரிவை கண்டுள்ளது.
இது, கடந்த நவம்பர் மாதத்தில், 2.7 சதவீதமாக இருந்தது.சுரங்க உற்பத்தி, நவம்பர் மாதத்தில், 1.7 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில், 5.4சதவீதமாக அதிகரித்துஉள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்கள் உற்பத்தி, டிசம்பரில், 2.2 சதவீதமாக உள்ளது. இது, அதற்கு முந்தைய மாதத்தில், 0.3 சதவீதமாக குறைந்து இருந்தது.மூலதன பொருட்களின் உற்பத்தி, 18.2 சதவீதமாக உள்ளது. நுகர்பொருட்கள் உற்பத்தி, 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது நவம்பர் மாதத்தில், 1.5 சதவீதமாக மிகவும் குறைந்திருந்தது.
மின்சார உற்பத்தி, டிசம்பரில், 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, நவம்பரில், 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், தொழில் துறை உற்பத்தி, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலத்தில் வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருந்தது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், தயாரிப்பு துறை உற்பத்தி, 6.9 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 2 சதவீதமாக இருக்கும். மேலும், சுரங்கத் துறை, கடந்த ஆண்டில், 1.3 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 1.5 சதவீதமாக இருக்கும் என்றும், மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஜனவரி மாதத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 7.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில், 7.35 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரியில், 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 1.97 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரியில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்ததற்கு, உணவுப் பொருட்கள் விலை உயர்ந்தது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.உணவுப் பொருட்களின் சில்லரை பணவீக்கம், மதிப்பீட்டு மாதத்தில், 13.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், மைனஸ் 2.24 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதத்தில், உணவுப் பொருட்கள் சில்லரை பணவீக்கம், 14.19 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதிலிருந்து இப்போது சற்று குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், பணவீக்கம் அதிகரித்திருந்ததன் காரணமாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில், தற்போது ஜனவரி மாதத்திலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து இருப்பதால், வரும் கூட்டத்திலும், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் இருக்காது என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|