பதிவு செய்த நாள்
18 பிப்2020
10:21
பொள்ளாச்சியில், தென்னை நார் மற்றும் நார் சார்ந்த, 750க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கயிறு, தென்னை நார், நார் துகள் கட்டிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தென்னை நாராக ஏற்றுமதி செய்வதோடு, அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதில், லாபம் அதிகம் கிடைக்கிறது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக, பொள்ளாச்சியில் இருந்து அதிகளவு தென்னை நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 1,400 கோடி ரூபாய்க்கு தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.பொள்ளாச்சி தென்னைக்கு புகழ் பெற்றது போன்று, தென்னை நார் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குவதால், ‘பொள்ளாச்சி தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரம்’ (டவுன் ஆப் எக்ஸ்போர்ட் ஆப் எக்ஸ்லன்ஸ்) என அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால எதிர்பார்ப்பு நிலவியது.
தென்னை நார் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில் வர்த்தக சபை சார்பில், பொள்ளாச்சிஎம்.பி., சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசிடம் எம்.பி., வலியுறுத்தியதை தொடர்ந்து, சமீபத்தில், ‘தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரம்’ என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.இதன் மூலம் சிறப்பு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்; வெளிநாடுகள் இனி, பொள்ளாச்சியை திரும்பி பார்க்கும் என தென்னை நார் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கயிறு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுக்கு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி செய்யும் நகரத்துக்கு, ஏற்றுமதிக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும். அந்த வகையில், தென்னை நார்மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரம் என பொள்ளாச்சியை அறிவித்துள்ளது.இதன் மூலம் பொள்ளாச்சிக்கு தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கான திட்டங்கள்; அதற்கான நிதி உதவிகள், தென்னை நார் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வசதிகள் உருவாகும்.மார்க்கெட் நிலவரம், சேமிப்பு கிடங்கு, தேசிய அளவிலான வர்த்தக கண்காட்சி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளும் மேம்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
உலக வரைபடத்தில் இடம்பெறும்!நார் துகள் கட்டி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மகேஷ்குமார் கூறியதாவது:பொள்ளாச்சியின் மீது அரசின் கவனம் திரும்பியுள்ளது. கண்டெய்னர் முனையம், ஆய்வுக்கூடங்கள் அமைக்க வாய்ப்புள்ளது.தென்னை மற்றும் நார் தொழிலுக்காக பிரத்யேக தொழில்பேட்டை கொண்டு வர வாய்ப்புள்ளது. ஒரே இடத்தில், தென்னை நார் தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் பயனாக இருக்கும்.சீனாவுக்கு தென்னை நாராக ஏற்றுமதி செய்யாமல், பொள்ளாச்சியிலேயே மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்தால், லாபம் கிடைக்கும். அன்னிய செலாவணி, 10 மடங்கு அதிகரிக்கும். கயிறு தொழில் ஏற்றுமதி தலைநகரமாக பொள்ளாச்சியை உலக வரைபடத்தில் மாற்ற வேண்டும். இதற்கான அடித்தளமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்தஸ்தை கருதுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு பெருகும்மத்திய அரசின் கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பொதுவான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதி உதவி கிடைக்கும். தேசிய அளவிலான கண்காட்சி நடத்தவும்; பயிற்சி கூடம் அமைக்கவும் வாய்ப்புள்ளது.பொள்ளாச்சியில் இருந்து, 10 – 20 நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று காட்சிப்படுத்தவும்; வெளிநாடுகளில் கண்காட்சி கூடம் அமைக்கவும் நிதி உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.வங்கி கடன் பெறுவது எளிதாகும். ஏற்றுமதஅதிகரிக்கும் போது, வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள், கயிறு வாரியம் மூலமாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|