பதிவு செய்த நாள்
18 பிப்2020
10:23
பல நேரங்களில், எதிர்பார்ப்புகள் நடப்பதில்லை. இந்த நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருக்கிறது. நிதியாண்டு துவக்கத்தில் உயர்ந்து வந்த ஏற்றுமதி, பின்னர் ஏனோ சரியத் துவங்கியது. நிதியாண்டு நிறைவடைய, இன்னும் ஒரு மாதமே பாக்கி. கடந்த நிதியாண்டில், ஆடை ஏற்றுமதி மதிப்பு, 1.13 லட்சம் கோடி ரூபாய்; இந்த நிதியாண்டில், ஏப்., முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில், 90 ஆயிரத்து 841 கோடியைத் தான் எட்டியிருக்கிறது. கடந்த நிதியாண்டு வர்த்தகத்தை, இந்த நிதியாண்டில் எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேமே.
வழக்கமாக, ஜன., முதல் மார்ச் வரை, ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும். ஆனால், இந்த முறை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.எம்.இ.ஐ.எஸ்., எனப்படும், ‘மெர்ச்சண்டைஸ் எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா ஸ்கீம்’ என்ற திட்டம் ரத்து செய்யப்பட்டதும், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., எனப்படும் மத்திய, மாநில வரிகளைத் திரும்பப் பெறுவதற்கான சலுகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதும் இதற்குப் பிரதானக் காரணங்களாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.‘வங்கதேசம், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் வரிச்சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தியாவுக்கு, இந்த வாய்ப்பு இல்லாததால், ஆடை ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். இதுதான் ஏற்றுமதி சரிந்ததற்கான பின்னணி’ என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், சீனாவுக்கான ஆர்டர்கள் வேறு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில், இந்தியாவுக்கும் ஆர்டர்கள் கைகூடும். இருப்பினும், இந்த நிதியாண்டு வர்த்தகத்தில் இது பிரதிபலிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், ஆர்டர்கள் கிடைப்பது என்பது தற்காலிகமானதுதான். அதேசமயம், இவ்வாறு கிடைக்கும் ஆர்டர்கள் மூலம், வர்த்தகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினால், ஆர்டர்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உயர்த்தலாம் ஏற்றுமதியை...சமீபத்தில் நடந்த ‘வெற்றிப்பாதையில் திருப்பூர் –2020’ நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட வல்லுனர்களின் கருத்துகள், ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்தப்பட்டால், திருப்பூர் உட்பட நாட்டின் ஆடை உற்பத்தி நகரங்கள், ஏற்றுமதியை எளிதாக உயர்த்த முடியும்.‘‘திருப்பூர் தொழில்துறையினர், தொழில் நடத்த, 60 சதவீத நேரத்தையும், தொழில் மேம்பாட்டுக்கு, 40 சதவீதத்தையும் செலவிட வேண்டும். ஆனால், முழு நேரத்தையும், ஆர்டர் அனுப்பவே செலவிடுகின்றனர்.உற்பத்தி திறன் மேம்பாட்டு நுட்பங்களை திருப்பூரில் சோதனை செய்து பார்த்தபோது, ஓரிரு நாட்களிலேயே, நிறுவனத்தின் உற்பத்தி திறன் 26 சதவீதம் அதிகரித்தது; தொழிலாளர் விடுப்பு எடுக்கும் விகிதம் குறைந்ததையும் காணமுடிந்தது.
இயந்திரங்கள் வாங்குவது, பராமரிப்பதற்கு முதலீடு செய்வதைப்போல், மனிதவள மேம்பாட்டுக்காகவும் நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும். முதலிலேயே சரியாகத் தயாரிப்பதுதான், உண்மையான தரம். இதன்மூலம், காலம் மற்றும் பொருள் விரயத்தை தவிர்க்கமுடியும்; குறித்த காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும். புதுமையான டிசைன்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் கிடைக்கும்.மின் கட்டணம், தொழிலாளர் சம்பளம் போன்ற செலவினம், இந்தியாவை விட சீனாவில் உயர்ந்துள்ளது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி திறன் மற்றும் தரம் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதுள்ள சர்வதேச சந்தை நிலவரத்தை பார்க்கும் போது, உற்பத்தி திறனை அதிகரித்து, செலவுகளை கட்டுப்படுத்தினால், இந்தியா, 20 சதவீத வளர்ச்சி பெறுவது எளிதாகும்’’கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துகளை, செயல்படுத்த வேண்டிய கட்டாயம், திருப்பூர் தொழில்துறையினருக்கு இருக்கிறது.இதன்மூலம், லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்டிப்பிடிப்பது எளிய பயணமல்ல தான்; ஆனால், முடியாததல்ல. திருப்பூர் தொழில்துறை தலைநிமிர வேண்டிய நேரம் இது!
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|