பதிவு செய்த நாள்
25 பிப்2020
05:45
மும்பை: உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி கூறிஉள்ளார்.
மும்பையில் நடைபெற்ற, தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் உரையாடியபோது, முகேஷ் அம்பானி கூறியதாவது:
இந்தியா, உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறும். அது, ஐந்து ஆண்டுகளிலா அல்லது 10 ஆண்டுகளிலா என்பதில் வேண்டுமானால் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். மேலும், இந்தியா முதன்மை, ‘டிஜிட்டல்’ சமுதாயமாக மாறுவதற்கான வாய்ப்பு கொண்டதாகவும் உள்ளது.
இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம், ‘மொபைல் நெட்வொர்க்’ வளர்ச்சி அடைந்து வருவது தான். மொபைல் நெட்வொர்க், முன்பைவிட வேகமாக தற்போது உள்ளது. பிரதமர் மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ எனும் திட்டத்தின் மூலம், இத்தகைய வளர்ச்சியை துாண்டிவிட்டார்.
இதன் காரணமாக, இப்போது, 38 கோடி மக்கள், ‘ஜியோ’வின், ‘4ஜி’ தொழில்நுட்பத்துக்கு மாறி இருக்கின்றனர். ஜியோ வருவதற்கு முன், இணைய வேகம், 256 கே.பி.பி.எஸ்., ஆக இருந்தது. ஆனால், ஜியோவின் வருகைக்குப் பின், வேகம், 21 எம்.பி.பி.எஸ்., ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான, ஜிம்மி கார்ட்டர், பில் கிளின்டன், ஒபாமா ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது இருந்த நிலையை விட, இப்போது டிரம்ப் வரும்போது நாட்டின் நிலை மிகவும் மாறிவிட்டது.
இதற்கு, மொபைல் இணைப்பு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியா, மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.
நாம் இதற்கு முன் பார்த்தது போல் இல்லாமல், அடுத்த தலைமுறை முற்றிலும் வித்தியாசமான இந்தியாவை காணும்.இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில் பங்கேற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியதாவது: இந்திய தலைமை செயல் அதிகாரிகள், தங்கள் சொந்த தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், தொழில்நுட்ப தீர்வுகள் குறித்தும் அறிந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கடந்த, 10 ஆண்டுகளில், வேகமாகச் செயல்பட்டவர்களை கண்டோம். ஆனால், அது மட்டும் போதாது. டிஜிட்டல் மயமாக்குவதால், உற்பத்தித் திறனை அதிகரிக்க, அது வழிவகுக்கும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில், மென்பொருள் பொறியாளர்களுக்கான, 72 சதவீத வேலைகள், தொழில்நுட்பம் அல்லாத பிற துறைகளில் தான் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|