பதிவு செய்த நாள்
29 மார்2020
01:57
மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் கண்டுள்ளது.
மார்ச், 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 35.24 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் தற்போது சரிவு தொடர்கிறது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 1,198 கோடி டாலர் சரிவைக் கண்டு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக சரிந்துள்ளது. மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது.தற்போதைய சரிவுக்கு, வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 1,026 கோடி டாலர் குறைந்து, 43 ஆயிரத்து, 710 கோடி டாலராக சரிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 76.15 ரூபாய் என, மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, தங்கள் முதலீடுகளை அதிக அளவில் வெளியே எடுத்துள்ளனர். மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 161 கோடி டாலர் குறைந்து, 2,785 கோடி டாலராக சரிந்தது.
இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.09 லட்சம் கோடி ரூபாய். இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|