பதிவு செய்த நாள்
31 மே2020
00:32
மும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் முன்வர வேண்டும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான, ’ஹால் அண்டு பார்ட்னர்ஸ்’ உடன் இணைந்து, உலகின் முக்கியமான தங்கநகை சந்தைகளான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில், 18 –65 வயதுடைய பெண்களிடம் கருத்துக் கணிப்பை, உலக தங்க கவுன்சில் மேற்கொண்டது.
இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வு குறித்து, உலக தங்க கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 37 சதவீதம் பெண்கள், இதுவரை தங்கம் வாங்காதவர்கள். ஆனால் அவர்கள் வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும், தகுதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களில், 44 சதவீதம் பேர் கிராம பகுதிகளையும், 30 சதவீதம் பேர் நகர்ப்புறங்களையும் சார்ந்தவர்கள். சில்லரை நகை விற்பனையாளர்கள் இப்பிரிவினரை இலக்காக கொள்ளலாம்.
இந்திய பெண்கள், நகை வாங்குவதில் ஆர்வம் உடையவர்கள், என்றாலும்; இளம் தலைமுறையினர், தங்கம் தங்களது அந்தஸ்து, பேஷன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவ தாக இல்லை என, கருதுகிறார்கள்.இளம் பெண்கள், தங்க நகைகளுடன் உணர்வு ரீதியாக இணைக்கப்படவில்லை. இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில், சந்தையில் தேவை குறையும்.
இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு பிறந்த பெண்களை ஈர்த்து, அவர்களின் தேவைகளை நவீன தொழில்நுட்பங்களுடன் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லை எனில், இத்தரப்பை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.இவ்வாறு உலக தங்க கவுன்சில் தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|