பதிவு செய்த நாள்
09 ஜூலை2020
22:59
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், விற்பனையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு உள்ளதாக, நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மிகவும் பாதிப்புக்கு உள்ளான, ‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்’, ‘மாரிக்கோ’ ஆகிய நிறுவனங்கள், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வளர்ச்சியை எதிர்பார்ப்ப தாக தற்போது தெரிவித்துள்ளன.
‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்’ நிறுவனம், மே மாத மத்தியில் துவங்கி, ஜூன் வரையிலான காலத்தில், விற்பனையில் வலுவான மீட்சியைக் கண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.வீட்டு பூச்சிக்கொல்லி பிரிவில் தேவை அதிகரித்திருப்பதாகவும், ஆரோக்கிய பிரிவிலும் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், கோத்ரெஜ் தெரிவித்துள்ளது.
மற்றொரு நுகர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘மேரிக்கோ’, ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாகவும், அதன் பின் வளர்ச்சி பெற்று, ஜூன் மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் மற்றும் உணவு வணிகம் ஆகியவை, ஏப்ரல் மாத துவக்கத்தில் மீட்சியை காணத் துவங்கியதாகவும், கூந்தல் எண்ணெய், தனிநபர் ஆரோக்கிய பொருட்கள் ஆகியவை மே மாத துவக்கத்தில் மீட்சி பெறத் துவங்கியதாகவும், ‘மேரிக்கோ’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது:தயாரிப்பு மற்றும் வினியோகத்தில், பல நிறுவனங்கள், கடந்த மாதத்தில் முன்னேற்றத்தை காணத் துவங்கி உள்ளன. நாடு முடக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து, பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதால், இத்துறையில் முன்னேற்றம் தொடர்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|