பதிவு செய்த நாள்
11 ஆக2020
10:22
‘கொரோனா’ வைரசில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்வது எப்படி என்பதை, உலகம் தெரிந்து கொண்டு விட்டது.
மனித குலத்தின் தற்போதைய போர் என்பது, பொருளாதார சீர்குலைவுக்கு எதிரானது. தான் வாழும் நகரத்தின் பொருளாதாரத்தையும், நாட்டின் வளத்தையும் பெருக்கும் தொழிலதிபர்களுக்கு, மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, பல குடும்பங்களை வாழ வைக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது.போருக்கு ஆயத்தமாவதை போலதான், பொருளாதார மீட்புக்கும் தயாராக வேண்டி இருக்கிறது. தொழில் நிறுவனங்கள், அவரவர் உற்பத்தி பலம், பொருளாதார பின்புலம், நுகர்வோர் தேவை, சந்தை மாற்றங்களை கொண்டு, எதிர்கால திட்டங்களை தீர்மானிக்கின்றன. அத்தகைய திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு அடிப்படையானது, வங்கிகள். ‘கோவிட்– 19’க்கு பின், தனிநபர், தொழில் நிறுவனங்களுக்கான வங்கி சேவைகள், சலுகைகளில் பல அறிவிப்புகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
ஆறு மாத சலுகை
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் முழுமையாக முடங்கின. ஏற்கனவே ரிசர்வ் வங்கி கடன் தவணை, வட்டி தள்ளி வைப்பு, 3 மாதங்களுக்கு நீட்டித்தது. மீண்டும் நீட்டித்து, மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மூலதன கடனுக்கான வட்டியை சேர்த்து, குறுகியகால கடனாக மாற்றவும் முடிவு எடுக்கப்பட்டது. அதை, 2021 மார்ச் 31ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.தற்போது, ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள், தொழில் துறைக்கு சாதகமாக உள்ளது. ஆக, 6ம் தேதி, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில், வங்கிகள் பெறும் ரெப்போ (குறுகியகால கடனுக்கான வட்டி) 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ (வங்கிகளின் டெபாசிட்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி) 3.75 சதவீதமாகவும் தொடரும் என்று முடிவு எட்டப்பட்டது.
புதிய அறிவிப்புகள்
‘ஒரேமுறை கடன் சீரமைப்பு திட்டம்’ 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதில் பயன் பெற, எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் பெரிய நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., மற்றும் தனிநபருக்கான கடன்கள் திருப்பி செலுத்தும் காலத்தை, 2 ஆண்டுகள் வரை வங்கிகள் நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பெற, வங்கிகளை அணுகி ஒப்புதல் பெற வேண்டும்.வங்கிகளில், தங்க நகைகளின் பேரில் வழங்கப்படும் (விவசாய பணிகள் அல்லாத) கடன், தங்கத்தின் மதிப்பில், 75 சதவீதம் அளவுக்கு, தற்போது வழங்கப்படுகிறது. அதை, 90 சதவீதம் வரை கடனாக வழங்க, வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, 2021 மார்ச் 31 வரை அமலில் இருக்கும். தற்போதைய தங்கத்தின் மீதான கடன், 90 சதவீதமாக உயர்த்தியது, தனி நபர்களுக்கும், சிறுதொழில் அமைப்புகளுக்கும் உதவி0யாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்புகள், எம்.எஸ்.எம்.இ., தொழில் துறையினருக்கும், தனி நபர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
@subtitle@மறுசீரமைப்பு வரப்பிரசாதம் @@subtitle@@
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) யில், 29 சதவீத பங்களிப்பு, எம்.எஸ்.எம்.இ,, நிறுவனங்கள் வாயிலாகவே நிகழ்கின்றன. அதன்மூலம், சுமார், 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஏற்றுமதி பங்களிப்பில் அதன் பங்கு, 48 சதவீதம். அதன் வாயிலாக, நாட்டின் கஜானாவில் பிறநாட்டு கரன்சிகள், அன்னிய செலாவணியாக குவிகின்றன. தற்போது, நாட்டில் 90 லட்சத்துக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தங்களை பதிவு செய்துள்ளன. ஆனால், தொழில் களத்தில், 6 கோடிக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் இருக்கலாம் என்கிறது, ஒரு புள்ளி விவரம். தமிழகத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.அவை முன் இருக்கும் ஒரே சவால், நிறுவனங்கள் வாங்கியிருக்கும் வங்கி கடனை திருப்பி செலுத்துவது தான். கடனை திருப்பி செலுத்துவதற்கு தொழில் நிலைமை சீராக வேண்டும். மறுபடி சந்தையை பிடிக்கும் வரை, கடன் நிலவரங்களை சீராக்க வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது ரிசர்வ் வங்கி. தொழில் நிறுவனங்கள், தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களில் மாற்றம் செய்யலாம். மறுசீரமைக்கலாம். இந்த அறிவிப்பு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
வராக்கடன் அபாயம்
கடன் மறுசீரமைப்பு கோருவதற்கு, தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலை பண சிக்கலின்றி நடத்த தேவையான நிதி தேவைகளை திட்டமிடும் திறன் பெற்றிருக்க வேண்டும். உற்பத்தி திறன், பொருளுக்கான தேவை குறித்த, முன்னறிதலும் முக்கியம். அப்போது தான், கடன் மறுசீரமைப்பை திட்டமிட முடியும்.பொதுவாக, வங்கிகளில் வாங்கிய கடனுக்கு, 90 நாட்கள் தொடர்ந்து அசல், வட்டி செலுத்தப்படா விட்டால், அவை, வராக்கடன் (என்.பி.ஏ.,) என்று வங்கிகளால் முடிவு செய்யப்படும். என்.பி.ஏ., என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தை, மற்ற வங்கிகள் புறக்கணிக்கும். அவ்வளவு எளிதில் மீண்டும் கடன் பெற முடியாது. அதனால் தான், ஒவ்வொரு நிறுவனங்களும், என்.பி.ஏ., வில் சிக்கிவிடாமல் இருக்க போராடுகின்றன.தொழில் வாய்ப்பு இன்றி, கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவிக்கும் நிறுவனங்கள் இந்த சலுகையை பயன்படுத்தி, வங்கி கடன்களை மறுசீரமைத்து, திருப்பி செலுத்துவதை திட்டமிட்டு கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவை என்.பி.ஏ.,வாக மாறும் அபாயமுள்ளது.
ஸ்டார்ட்–அப் முன்னுரிமை
அதேபோல, கடன் வழங்குவதற்கு வங்கிகள் முக்கியத்துவம் அளித்து வரும் முன்னுரிமை பட்டியலில், இதுவரை வேளாண்மை, சிறுதொழில் போன்றவை தான் இருந்தன. தற்போது, ‘ஸ்டார்ட்–அப்’ நிறுவனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கம்ப்யூட்டர் மற்றும் மென்பொருள் சார்ந்த தகவல் தொழில்நுட்ப தொழில்களுக்கும், அவை பேருதவியாக இருக்கும். முன்னுரிமை பட்டியல் தொழில்களுக்கு, வங்கிகள், 40 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கியாக வேண்டும்.
இன்னொரு ஆட்டம்
நிதியாண்டின் முதல் காலாண்டில், ‘கோவிட்–19’ ஏற்படுத்திய பாதிப்பால், நாட்டின் பொருளாதாரம் சுருண்டு விட்டது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்புகள், அடுத்த காலாண்டில், பொருளாதாரம் கொஞ்சம் நிமிர்வதற்கான வாய்ப்புகளை உணர்த்தியுள்ளன. அதன் எதிரொலியே, பங்குச்சந்தைகளின் சமீபத்திய உற்சாக ஏற்றம். அது, வாழ்க்கையோ, தொழிலோ, ‘இன்னொரு ஆட்டம்’ தொடங்குவதற்கு, எல்லோருமே உற்சாகமாக, உறுதியோடு தயாராகத்தான் இருக்கிறோம். அது, உள்ளத்தின் அளவில் மட்டுமே அல்லாமல், வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்வதற்கு, உண்மையான திட்டமிடலாக இருக்க வேண்டும்.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
– தொழில் சுகம் தொடரும்...
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|