பதிவு செய்த நாள்
27 செப்2020
20:35
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
சொந்த வீடு வாங்குவது என்பது, வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக அமைவதால், மிகுந்த கவனத்துடன் இதை அணுகுவது அவசியமாகிறது. சொந்த வீடு வாங்கும் போது பல்வேறு முக்கிய அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். வீட்டின் விலை தவிர, அமைவிடம், கடனுக்கான மாதத்தவணை, வட்டி விகிதம், வீடு வாங்குவதன் நோக்கம் உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். சொந்த வீடு வாங்குவது என்பது, உண்மையில் பல அடுக்குகளில் முடிவு எடுக்க வேண்டிய விஷயம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இதற்கு உதவக்கூடிய கேள்விகளையும் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சரியான நேரம்
சொந்த வீடு வாங்க சரியான நேரத்தை தீர்மானிப்பது அவசியம். அதாவது வீடு வாங்கும் நபர், பொருளாதார நோக்கில் அதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு தேவையான முன்பணம், மாதத்தவணையை சமாளிக்கும் திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இதை தீர்மானிக்க வேண்டும். இதன் பிறகு, வீடு வாங்கும் முடிவை செயல்படுத்துவதற்கான நேரம் பற்றிய கேள்வியை கேட்டு கொள்ள வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையில் சில ஆண்டுகளாக தேக்கம் நிலவுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, வீடுகளின் விலை சில இடங்களில் குறையலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே, விலை குறைய காத்திருக்க வேண்டுமா எனும் கேள்வி முக்கியமாகிறது. ஆனால், விலை போக்கை யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதால், மிகச்சிறந்த விலையை அளிக்க கூடிய வகையில் சலுகைகள் கொண்ட திட்டங்களை தேர்வு செய்யலாம்.
வீட்டின் விலையைப்போலவே, வாங்குபவரின் பட்ஜெட்டும் முக்கியம். சொந்த வீட்டிற்கான பட்ஜெட்டை எந்த அளவு தாங்கி கொள்ள முடியும் எனும் கேள்வியை ஆராய்வதும் அவசியம். வீட்டின் மதிப்பு அகல கால் வைப்பதாக அமைந்து விடக்கூடாது. அதே போல, எந்த அளவுக்கு கடன் வாங்குவதும் ஏற்றதாக இருக்கும் என பார்க்க வேண்டும்.
மாதத்தவணை செலுத்துவது மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்காமல் இருக்க வேண்டும். பொதுவாக, கையில் வரும் சம்பளத்தில், 30 சதவீத தொகையை மாதத்தவணையாக செலுத்துவது ஏற்றது என்கின்றனர். இதனுடன் மற்ற கடன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாடகை வீடு
வீட்டின் பட்ஜெட்டை தீர்மானித்த பிறகு, கட்டப்படும் வீட்டை வாங்குவதா அல்லது கட்டப்பட்டு வரும் வீட்டை வாங்குவதா எனும் கேள்வி முக்கியமாக அமைகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடு எனில், குடியிருப்பு திட்டம் தாமதமாகும் எனும் அச்சம் இல்லாமல் இருக்கலாம்.
மேலும், உடனே குடியேறலாம் என்பதால், மாதத்தவணை செலுத்துவதும் பொருத்தமாக இருக்கும். ஆனால், வீட்டின் விலை சற்று கூடுதலாக இருக்கலாம். கட்டப்பட்டு வரும் வீடு எனில், நிறுவனத்தின் நம்பகத்தன்மை, சலுகைகள் உள்ளிட்ட மற்ற சாதகமான அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.இந்த கேள்விகளோடு, சொந்த வீடு வாங்கும் முடிவை வாடகை வீட்டிலேயே தொடர்வதுடன் ஒப்பிட்டு பார்ப்பதும் அவசியம்.
வீட்டிற்கான வாடகை மற்றும் வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு இதை தீர்மானிக்கலாம். மேலும், பணி மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் அமைவிடம், அருகாமைத்தன்மை ஆகிய அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|