பதிவு செய்த நாள்
24 நவ2020
11:17
'கொரோனா' நெருக்கடியால், தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், பி.எப்., சந்தாதாரர்கள், தங்களுடைய வைப்பு நிதி கணக்கிலிருந்து, 75 சதவீதம் அல்லது, மூன்று மாத ஊதியம் இரண்டிலும் எது குறைவோ, அதை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்பணத்தை திரும்ப செலுத்தவேண்டியதில்லை எனவும் கூறப்பட்டது. உறுப்பினர் ஒருவர் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்ட பின், பணப்பயன் சென்றடையும்.இந்நிலையில், சந்தாதாரர்கள் அலைச்சலை குறைக்கும் விதமாக, நாட்டின் வேறுபட்ட மண்டல அலுவலகங்களில் இருந்தும், உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களை பரிசீலித்து பணம் அனுப்பும் சேவை, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், முன்பணம் பெறுவதற்கு ஆர்வம் காட்டினர்.
மேலும், ஓய்வூதியம் மற்றும் முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம், வைப்புநிதி தொகையை ஒரு பி.எப்., கணக்கில் இருந்து, மற்றொரு பி.எப்., கணக்குக்கு மாற்றுவதற்கான விண்ணப்பமும், இப்புதிய நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது.பெறப்பட்ட அனைத்து விண்ணப்ப படிவங்களையும் மற்ற அலுவலகங்களுக்கும் சமமாக பிரித்து கொடுத்து பரிசீலனை செய்து காலதாமதமும் தவிர்க்கப்பட்டது. 'ஆட்டோ செட்டில்மென்ட்' என்ற செயலாக்கத்தின் வாயிலாக, அனைத்து 'கோவிட் 19' விண்ணப்பங்களையும், மூன்று நாட்களுக்குள் பரிசீலித்து பணப்பயன்களை அனுப்பும் முறை மேற்கொள்ளப்பட்டடது.
இதனால், கோவை பெருமண்டலத்தில், ஏப்., முதல் இதுவரை 'கோவிட் 19', மருத்துவம், கல்வி என பல்வேறு தேவைகளுக்காக, 2,605 கோடி ரூபாய் முன்பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களை கொண்ட, கோவை பெருமண்டலத்தில் ஏப்., முதல் இதுவரை, 3.14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கோவிட் காரணமாக மட்டும், 573 கோடியே, 8 லட்சத்து, 14 ஆயிரத்து, 201 ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.தவிர, உயர்கல்வி, உடல்நிலை சரியில்லாதது, வீடு பராமரிப்பது என, பல்வேறு தேவைகளுக்கு சேர்த்து மொத்தம், 2,605 கோடி ரூபாய் இதுவரை முன்பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும், 99942 55012 என்ற பிரத்யேக வாட்ஸ்-அப் எண், ro.coimbatore@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், சந்தாதாரர்கள் குறைகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|