பதிவு செய்த நாள்
29 நவ2020
22:06
கணிப்புகளை எல்லாம் மீறி, இந்தியாவின் இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி., மதிப்பீடு, கணிசமாக குறைந்துள்ளது. நாம் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறோம் என்பதற்கான நிரூபணமாக இருக்கும் இந்த மதிப்பீடு, எதிர்காலத்திலும் இப்படியே தான் இருக்குமா?
ஜி.டி.பி., என்பது நமது இதயத்துடிப்பை அளப்பது போன்றது. அதாவது, நம் பொருளாதார ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? மருத்துவ உதவி தேவையா? எந்தவிதமான உதவிகள் தேவை என்பதையெல்லாம் முடிவு செய்வதற்கு, ஜி.டி.பி., மதிப்பீடுகள் உதவுகின்றன.
மிளிர்கிறது
அது ஏதோ ஓர் எண் என்று கடந்து போய்விட முடியாது. நம் வாழ்வும் தாழ்வும் இதோடு சம்பந்தப்பட்டிருப்பதால், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் இது இன்னும் முக்கியம். ஜூலை முதல் செப்டம்பர் வரையான இரண்டாம் காலாண்டில், நம் வளர்ச்சி, 7.5 சதவீதம் சரிந்திருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதலாம் காலாண்டில் ஏற்பட்ட, 23.9 சதவீத சரிவோடு ஒப்பிடும்போது, நாம் கணிசமாக முன்னேறிஇருக்கிறோம். அதாவது, ஊரடங்குத் தளர்வுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இது.
இரண்டாம் காலாண்டு ஜி.டி.பி., யில், 8 முதல் 12 சதவீத சரிவு இருக்கலாம் என்ற கணிக்கப்பட்டது. ஆனால், 7.5 சதவீதச் சரிவு தான் என்பதே சற்று நிம்மதியை அளித்துள்ளது. இதற்கு மூன்று, நான்கு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே பிரதான காரணங்கள். முதலில், வேளாண் சார்ந்த துறைகள்; கடந்த காலாண்டைப் போன்றே, இந்தக் காலாண்டிலும், 3.4 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது.
மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட துறைகள், சென்ற காலாண்டில், 7 சதவீத சரிவைச் சந்தித்திருக்க, இந்தக் காலாண்டில், 4.4 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.ஆச்சரியமான வளர்ச்சி கண்டுள்ளது, உற்பத்தி துறை. கடந்த காலாண்டில், 39.3 சதவீதம் சரிந்திருந்த இந்தத் துறை, தற்போது, 0.6 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அரசாங்க முதலீட்டுச் செலவினங்கள் அதிகரிக்கவில்லை என்றாலும், நுகர்வோர் செய்துள்ள செலவுகளினால் தான், முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், ஏற்றுமதியின் அளவும் பெருகிஉள்ளது.
உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்துக்கு, இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, பல்வேறு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்கள் ஊரடங்குக் காலத்தில் ஆவலோடு காத்திருந்தனர். அந்தத் தேக்கி வைக்கப்பட்ட தேவையினால், தற்போது விற்பனை பெருக, அதனால் உற்பத்தி பெருகியது. இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். பல்வேறு தொழிலக, உற்பத்தி நிறுவனங்கள் லாபம் காட்ட வேண்டும் என்பதற்காக, இந்தக் காலாண்டில், தங்கள் செலவுகளை மிகக் கடுமையாகக் குறைத்தன. இதனாலும், உற்பத்தித் துறை மிளிர்கிறது.
எச்சரிக்கை உணர்வு
எது எப்படியோ, கொரோனா கால பாதிப்புகளில் இருந்து படிப்படியாக மீள்கிறோம் என்பது உறுதியாகியுள்ளது. இதே மாதிரியான வளர்ச்சி, அடுத்தடுத்த காலாண்டுகளில் தொடருமா? விவசாயத்தில் கண்டிப்பாகத் தொடரும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. நல்ல பருவ மழை பெய்து உள்ளது. ஏற்கனவே சம்பா பருவ பயிர் சாகுபடியினால் நல்ல உற்பத்தி கிடைத்திருக்க, தற்போது குறுவை சாகுபடியின் பரப்பளவும் உயர்ந்துள்ளது. இதனாலும் உற்பத்தி பெருக, அதன்மூலம், அடுத்த இரண்டு காலாண்டுகளிலும் வேளாண் துறையின் வருவாய் பெருகப் போவது உறுதி.
மேலும், கால்நடை, பால், இறைச்சி உற்பத்தியும் நன்கு உயர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதர துறைகளின் வளர்ச்சி பற்றிப் பேசும்போது, இரண்டு அறிஞர்களின் வார்த்தை கள் இங்கே கவனம் பெறுகின்றன.இரண்டாம் காலாண்டு ஜி.டி.பி., மதிப்பீடுகள் வெளியானவுடன் பேசினார், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன். அப்போது, தாம், ‘இந்த மதிப்பீட்டைக் கண்டு கொண்டாட்ட மனநிலையை அடையவில்லை. மாறாக, ‘எச்சரிக்கையுணர்வுடன் நம்பிக்கை’யாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்று இன்னும் தொடர்வதாலும், நாடெங்கும் மழைக்காலம் நடைபெற்று வருவதாலும் தான் இந்த எச்சரிக்கையுணர்வு என்று அவர் விளக்கினார். உண்மை தான். இந்தியாவின் பல மாநிலங்களில், கொரோனாவின் இரண்டாம் அலை, மூன்றாம் அலை பாதிப்புகள் தொடர்கின்றன. பயண நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. இன்னும் சுற்றுலா, தங்கும் விடுதிகள், திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவை முழுமையாக நடைபெற அனுமதிக்கப்படவில்லை. இவை சார்ந்த தொழில்கள் இன்னும் மூச்சுமுட்டிக்கொண்டு தான் நிற்கின்றன.
இந்நிலையில், இரண்டாம், மூன்றாம் அலை தாக்குமானால், மக்கள் திண்டாடுவதோடு; பொருளாதாரமும் பாதிக்கப்படுவது உறுதி.இரண்டாவது குரல், அரசுப் புள்ளியியல் துறையின் முன்னாள் தலைவரான பிரணாப் சென் தெரிவித்திருப்பது.
ஒளிவிளக்கு
பண்டிகை காலத்தை ஒட்டி, இரண்டாம் காலாண்டில் தான், தொழில் நிறுவனங்கள் உற்பத்தியின் அளவை உயர்த்தும், சந்தைக்கு அனுப்பிவைக்கும், பல்வேறு சலுகைகளை வழங்கும். மூன்றாம் காலாண்டிலோ, புதிய உற்பத்திகள் இராது. விற்பனை மட்டுமே இருக்கும். அதனால், தற்போது நடைபெறும் மூன்றாம் காலாண்டில், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சி இராது. பொருட்களின் விற்பனை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொண்டே, அடுத்தடுத்த காலாண்டுக் கான உற்பத்தியின் அளவு பெருகும் அல்லது தேக்கமடையும் என்று தெரிவித்துள்ளார் பிரணாப் சென்.
மூன்றாம், நான்காம் காலாண்டுகளில், அரசாங்கம் கடன் வாங்கி, செய்ய திட்டமிட்டுள்ள செலவுகளை இன்னும் முறைப்படுத்த வேண்டும். நேரடியாக மக்கள் கையில் பணத்தை வழங்குவதை விட, அதை மாநில அரசுகளுக்கு வழங்கி, அதன்மூலம் வேலைவாய்ப்பு தரும் வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யவேண்டும். ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவ மீட்சி தற்போது ஏற்பட்டிருப்பதாக பல பொருளாதாரஅறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது ஆங்கில எழுத்து ‘டபிள்யூ’ மாதிரியோ ‘கே’ மாதிரியோ ஆகிவிடக் கூடாது என்பது தான் மக்கள் அனைவரது பிரார்த்தனையும் வேண்டுதலும். இப்போதைக்கு கொரோனா குகையின் முனையில் ஒளிவிளக்கு தெரிகிறது.
ஆர். வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053880
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|