பதிவு செய்த நாள்
10 ஜன2021
22:18
கட்டுமானத் துறையில், மஹாராஷ்டிரா மாநிலம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்திய அளவில் அனைவருக்கும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில், வேளாண்மைக்கு அடுத்து, அதிக வேலைவாய்ப்பை வழங்குவது கட்டுமானத் துறை தான். பல்வேறு பின்தங்கிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவெங்கும் பரவி, பணியாற்றுவது கட்டுமானத் துறையில் தான்.
மீள்வதற்கு முயற்சி
கொரோனா கொள்ளை நோய், அனைவரது வாழ்விலும் நிச்சயமின்மையை ஏற்படுத்திவிட்டது. தற்போது ஒவ்வொரு துறையும் இதன் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநில அரசுகள் செய்யவேண்டிய உதவி தான் பிரதானமானது.
மஹாராஷ்டிரா மாநில அரசு இதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர் 31வரை பதிவு செய்யப்படும் புதிய வீட்டுப் பத்திரங்களுக்கான முத்திரைத் தாள் கட்டணத்தை, 2 சதவீதமாகக் குறைத்தது அம்மாநில அரசு.அவ்வளவு தான்! செப்டம்பர்முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில், பத்திரப் பதிவுகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 92 சதவீதம் உயர்ந்தது.
59 சதவீதம் வருவாயும் உயர்ந்தது.தற்போது, மார்ச் 31, 2021 வரை செய்யப்படும் புதிய பத்திரப் பதிவுகளுக்கான முத்திரைத் தாள் கட்டணம், 3 சதவீதம் தான். வழக்கமாக, 5 சதவீதமாக இருந்த இந்தக் கட்டணம், 2 மற்றும், 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டதில், அம்மாநிலத்தில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான உற்சாகமும் பெருகியுள்ளது.மஹாராஷ்டிரா அரசு இன்னொரு முடிவையும் அறிவித்துள்ளது. இதற்கு, வங்கியாளரான தீபக் பரேக் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளே காரணம்.
அதன்படி, மஹாராஷ்டிராவில் வசூலிக்கப்படும் கிட்டத்தட்ட, 22 பிரிமியம் தொகைகளில், 50 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டு இறுதிவரை அமலில் இருக்கும்.அதாவது, வீடு கட்டும்போது, பல்வேறு பிரிமியம் தொகை வசூல் செய்யப்படும்.அடிமனைக்கு ஏற்ப எத்தனை மடங்கு வரை கட்டடம் எழுப்பப்படலாம் என்பதே எப்.எஸ்.ஐ., எனப்படும், ‘புளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ்’, சாலை அகலம் போதுமான அளவு இருந்தால், அங்கே கூடுதல் தளங்களை எழுப்பிக்கொள்ள, பிரிமியம் எப்.எஸ்.ஐ., வழங்கப்படும்.
இதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி, அனுமதி பெறவேண்டும்.இதேபோல், மும்பையில், லிப்டு, லாபி உள்ளிட்ட, 22 வசதிகளை விரிவுபடுத்திக்கொள்ள கூடுதல் பிரிமியம் தொகை செலுத்தி அனுமதி பெறலாம்.பெங்களூரில், 10; டில்லியில், 5 வசதிகளைப் பெறுவதற்குக் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். மொத்த கட்டுமான செலவில், பிரிமியம் தொகை மட்டும் கிட்டத்தட்ட, 18 சதவீதம். தற்போது இது குறைக்கப்பட்டுள்ளதால், மொத்த கட்டுமானச் செலவே, 12 முதல், 17 சதவீதம் வரை குறையும் என்று தெரிவிக்கின்றனர், இத்துறை நிபுணர்கள்.
ஏழைகளின் வாழ்வாதாரம் மீட்பு
இதனால், வீடு வாங்குவோருக்கும் லாபம், கூடுதல் பத்திரங்கள் பதிவாவதால், அரசாங்கத்துக்கும் லாபம். கட்டுமானத் துறை வளர்ச்சி பெற்று, தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் இன்னொரு பெரிய லாபம்.தமிழ்நாடு அரசு இதில் இருந்து பாடம் கற்க வேண்டும்.தமிழகத்தில் இன்னும் முத்திரைத் தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், 11 சதவீதமாக இருக்கிறது. இதை மொத்தத்தில், 6 சதவீதமாகக் குறைக்கவேண்டும் என்று ஏற்கனவே கட்டுமானச் சங்கமான, ‘கிரெடாய்’ கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதைச் செய்வதால், அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் ஏற்படப் போவதில்லை என்பதற்கு, மும்பையே முன்னுதாரணம்.இங்கே வீட்டுக் கட்டுமானத்துக்கான பிரிமியம், எப்.எஸ்.ஐ., யைத் தவிர, வாடிக்கையாளர் கோரும் கூடுதல் வசதிகளைச் செய்து தருவதற்கான தனிக் கட்டண முறையே அமலில் இல்லை. அதனால், எல்லோரும் விதிகளை மீறாமல் கட்டுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். விதிமீறலுக்கான வருவாய் அரசுக்குப் போய்ச் சேருவதில்லை என்பது தான் உள்ளர்த்தம்.இத்தகைய வசதிகளை அனுமதித்து, அதற்கான பிரிமியம் தொகையைக் குறைவாக நிர்ணயித்து, அரசுக்கான வருவாயை உயர்த்திக் கொள்ளலாமே என்று ஆலோசனை சொல்லப்படுகிறது.வணிகம் பெருகுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மஹாராஷ்ட்ரத்தின் முயற்சியால், லட்சோப லட்சம் ஏழைகளின் வாழ்வாதாரம்மீட்கப்பட்டுள்ளது. அதைத் தமிழகமும் பின்பற்றலாமே?
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|