பதிவு செய்த நாள்
17 ஜன2021
22:08
வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது அதிகரித்திருக்கிறது. வங்கித் துறை தொடர்பான கேர் ரேட்டிங், வங்கிகளின் கடன் வளர்ச்சியில் தனிநபர்களுக்கு வழங்கப்படும் சில்லரை கடன், முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கிறது. வீட்டுக்கடன் மட்டும் அல்லாமல், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் வசதியை வாடிக்கையாளர்கள் நாடுவதும் அதிகரித்துள்ளது. வங்கிகளும், கடன்களுக்கான சலுகைகளை அளித்து வருகின்றன. கடன் பெறுவது எளிதாகி இருக்கும் சூழலில், கடன் வலையில் சிக்காமல் இருக்கும் வகையில் நிதி விஷயங்களை திட்டமிடுவது அவசியம்.
நல்ல கடன்:
பல நேரங்களில் கடன் வாங்கும் தேவை ஏற்படலாம். ஆனால், எல்லா கடன்களும் ஏற்றவை அல்ல. பொதுவாக, வீட்டுக் கடன் அல்லது கல்விக் கடன் போன்றவை, எதிர்கால மதிப்பை அளிக்கும் நல்ல கடனாக கருதப்படுகின்றன. மாறாக, வாழ்வியல் தேவைக்காக வாங்கப்படும் கடன்கள் மோசமானவையாக அமைகின்றன.
தவணை வரம்பு:
கடன் பெறுவதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், திரும்பச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும் என்பது தான். அதாவது, கடன்களுக்கு செலுத்தும் மாத தவணை வருமானத்தில், 40 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பது நல்லது. தனிநபர் கடன் தவணை, 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
வங்கி கடன்:
நிதி நுட்ப நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் பல, எளிய கடன் வசதியை வழங்குகின்றன. எனினும், வங்கிகளில் கடன் பெறுவது ஏற்றது. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கடன் வசதியை நாடலாம். இதன் மூலம், போலி கடன் செயலிகளிடம் சிக்கிக் கொள்வதில் இருந்து தப்பலாம்.
கடன் நிபந்தனைகள்:
கடன் வழங்கும் போது, ஒருவரின் கடன் தகுதி மற்றும் பின்னணியை வங்கிகள் ஆராய்கின்றன. இதற்கு மாறாக, கடன் தகுதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே வழங்கப்படும் கடன்களும் இருக்கின்றன. இவற்றுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை உணர வேண்டும்.
கார்டு கடன்:
இதே போலவே, ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடிலும் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டை மிகையாக பயன்படுத்துவது மற்றும் திரும்பச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அதிகரிக்க அனுமதிப்பது, நிச்சயம் கடன் வலையில் சிக்க வைக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கிரெடிட் கார்டு பயன்பாட்டை ஆராய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|