பதிவு செய்த நாள்
28 ஜன2021
00:25
புதுடில்லி:நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, இந்திய அரசு, 10 ஆயிரத்து,220 கோடி ரூபாயை தர தாமதிப்பதால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் சொத்துக்களை, ஜப்தி செய்வது குறித்த நடவடிக்கைகளில் இறங்க இருப்பதாக, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவது சம்பந்தமாக, கடந்த, ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், பிரிட்டனைச் சேர்ந்த, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், நடுவர் தீர்ப்பாயத்தின் மூலம், சாதகமான தீர்ப்பை அண்மையில் பெற்றது. இதனையடுத்து, இந்திய அரசு, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனத்துக்கு, 8,760 கோடி ரூபாயையும், அதற்கான வட்டித் தொகை மற்றும் வழக்கு செலவு ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என, நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன்படி, இந்திய அரசு, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது. இந்தியா, நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை விரைவில் நிறைவேற்றும் என்ற எதிர் பார்ப்பில் பங்குதாரர்கள் இருப்பதாகவும், அதனால், உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கூறி, லண்டனில் உள்ள, இந்திய தூதரகத்துக்கு, ‘கெய்ர்ன் எனர்ஜி’ கடிதம் எழுதி உள்ளது.
மேலும் தாமதமாகும்பட்சத்தில், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடிதத்தின் நகலை, இந்திய பிரதமர் அலுவலகத்துக்கும், நிதியமைச்சகம் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பி உள்ளது.
‘கெய்ர்ன் எனர்ஜி’க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை முழுமையாக படித்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக, அப்போது, இந்தியா தெரிவித்திருந்தது.இந்நிலையில், நியுயார்க் மாநாட்டு ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டிருப்பதால், பணத்தை திருப்பி செலுத்தாதபட்சத்தில், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்கிறார்கள், சட்ட நிபுணர்கள்.
மேலும், மேல்முறையீட்டுக்கு சென்றாலும், இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|