பதிவு செய்த நாள்
02 மார்2021
21:00
சென்னை:இந்தியாவில் கால்பதித்து, 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 90 லட்சம் கார்களை தயாரித்து, அபார வளர்ச்சியை அடைந்துள்ளது,
‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம். தென் கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில், 1996ல், தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது. 1998ல் முதல் காரானா, ‘ஹூண்டாய் சான்ட்ரோ’வை அறிமுகம் செய்தது. அதன் பின், ‘ஆக்சென்ட்’ என்ற ‘செடான்’ வகை காரை, 1999ல் அறிமுகம் செய்தது.
தொடர்ந்து பல்வேறு கார்களை அறிமுகம் செய்த ஹூண்டாய், தற்போது, இந்தியாவிலேயே அதிக கார் தயாரிக்கும் நிறுவனங்களில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2021 ஜனவரி நிலவரப்படி, இந்திய கார் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு, 17 சதவீதம் ஆகும். மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில், தொடர்ந்து முதல் இடத்தை வகிக்கிறது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, லத்தீன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட, 88 நாடுகளுக்கு, சென்னையில் இருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.‘சான்ட்ரோ, கிரான்டு ஐ.10 – எலைட் ஐ.20, ஆரா, வென்யூ, கிரெட்டா, எலக்ட்ரிக் கார் கோனா’ உட்பட, ஒன்பது மாடல் கார்களை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளில், 90 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 30 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும், 61 ஆயிரத்து, 800 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை 26.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும், இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களுக்காக, 25வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஏழு இருக்கைகள் கொண்ட ‘அல்கசர்’ என்ற, பிரீமியம் எஸ்.யு.வி., ரக கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக, நான்கு ஆண்டுகளில், 3,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், குறைந்த விலையில், உள்நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களை, 1,000 கோடி ரூபாயில் தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|