பதிவு செய்த நாள்
12 மே2021
20:59
மும்பை:தங்க நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாளாக கருதப்படும், ‘அக்ஷய திரிதியை’ நாளைய தினம் வருகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக, இந்த ஆண்டும் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், அக்ஷய திரிதியை நாளின் போது, தங்க நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும் என, துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் ஆஷிஷ் பெத்தே கூறியதாவது:கடந்த ஆண்டிலாவது, ஆன்லைன் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், ‘ஆர்டர்’கள் பெறப்பட்டு, விற்பனை நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால், அதுவும் குறைந்து போய்விட்டது.
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், ‘ஆர்டர்’ பெற்றாலும், ‘சப்ளை’ செய்ய முடியாத நிலையுள்ளது.இந்த நிதியாண்டில் நடந்த ஒரே நல்ல விஷயம், பல திருமணங்கள் இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, தற்போதைய ஊரடங்குக்கு முன்பாகவே பலர் நகைகளை வாங்கியது தான்.இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவால், கடந்த ஆண்டில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பமோ, அல்லது, இந்த ஆண்டில் இழந்த குடும்பமோ, நிச்சயமாக நாளை நகை வாங்க வரமாட்டார்கள்.இப்படி, நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், நுகர்வோரின் நம்பிக்கை மிகவும் குறைந்து உள்ளது.
மேலும், நோய் தொற்று பரவல் காரணமாக, தற்போது பணத்தை ரொக்கமாக கையில் வைத்துக்கொள்வதையே பலரும் விரும்புவர். தங்க நகைகளில் முதலீடு செய்ய முன்வர தயங்குவர் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. எனவே, விலை குறைந்ததன் காரணமாக, சிறிய அளவிலாவது விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில், தங்க நகை வணிகம் கிட்டத்தட்ட, 70 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த நிதியாண்டு, ஏப்ரலில் துவங்கியதுமே ஊரடங்குகள் பிறப்பிக்கப் பட்டு விட்டன. இதனால், அரசு ஊக்கச் சலுகைகள் தருமா என எதிர்பார்க்கின்றனர் இத் துறையினர்.
இந்நிலை குறித்து, உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறிய தாவது: ஊரடங்குகளால் நேரடி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டே பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனைக்கான பலதொழில்நுட்ப வசதிகளை அமைத்துக் கொண்டு விட்டன. இது சற்று ஆறுதலான விஷயம். சில மாநிலங்களில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அங்கு ஓரளவு விற்பனை நடைபெற வாய்ய்ப்பிருக்கிறது.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|