பதிவு செய்த நாள்
21 ஜூன்2021
02:10
சொந்த வீடு கனவை நனவாக்கும் வீட்டுக் கடன் என்பது மிகப்பெரிய பொறுப்பாக அமைவதோடு, நீண்ட கால கடன் பொறுப்பாகவும் அமைகிறது. எனவே, வீட்டுக் கடனை பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வட்டி விகித போக்கு உள்ளிட்ட அம்சங்களை, கடன் பெற்றவர்கள் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். கடனுக்கான மாதத் தவணையின் சுமை அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கு முயற்சிக்கலாம். மாதத் தவணையை குறைப்பது பலவிதங்களில் கைகொடுக்கும். வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை குறைக்க உதவும் வழிகளை பார்க்கலாம்.
வட்டி விகித முறை:
வீட்டுக் கடன் பெற்றவர்களில் பலர், கடனுக்கான மாதத் தவணை அமைப்பை கவனிப்பதே இல்லை. வட்டி விகித முறைக்கு ஏற்ப தவணை அமைவதால், ‘பேஸ்ரேட்’ போன்ற பழைய முறையில் கடன் பெற்றவர்கள் அதிக தவணை செலுத்தி வரலாம். எனவே, புதிய முறைக்கு மாறுவதால் தவணை குறையும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
கடன் மாற்றம்:
அண்மை ஆண்டுகளில் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. தற்போது மிகவும் குறைவான வட்டி விகிதம் நிலவுகிறது. எனவே, வங்கிகள் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு, குறைவான விகிதம் அளிக்கும் வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
விகித மாற்றம்:
வீட்டுக் கடனில் மாறும் வட்டி விகிதம் மற்றும் நிலையான வட்டி விகிதம் என இரண்டு வகைகள் உள்ளன. மாறும் வட்டி விகிதத்தை விட, நிலையான வட்டி விகிதம் 2 சதவீதம் வரை கூடுதலாக இருக்கலாம். நிலையான வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்தால், அதை மாறும் வட்டி விகிதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
முன்பணம்:
கடன் பெற்றவர்கள் அசலுக்கான தொகையில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தலாம்; கடன் சுமை குறைய இதுவே சிறந்த வழி. அசலில் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, கடனுக்கான காலம் குறையும். இதன் மூலம் முன்னதாகவே கடனை அடைக்கலாம். எனினும் விரும்பினால், மாதத் தவணை குறையும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.
கடன் சீரமைப்பு:
கடனுக்கான காலத்தை நீட்டிப்பதன் மூலமும் மாதத் தவணையை குறைக்கலாம். ஆனால், இது கடனை அதிக காலம் திரும்ப செலுத்த வைக்கும். மேலும், ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு இது பொருந்தாது. தற்போது கொரோனா சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள கடன் சீரமைப்பு வசதியையும் பரிசீலிக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|