பதிவு செய்த நாள்
21 ஜூன்2021
02:13
கொரோனா கட்டுப்பாடுகள் விலகும் சூழலில், நுகர்வோர் தங்களை அறியாமல் ‘ஷாப்பிங்’ வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
எதிர்பாராமல் தாக்கிய கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறையத் துவங்கியுள்ள நிலையில், நுகர்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மீண்டும் பழைய இயல்புக்கு திரும்புவதை எதிர்பார்த்திருக்கின்றனர்; அதற்கேற்ப கட்டுப்பாடுகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இரண்டாண்டுகள் வரை நீடிக்கலாம் என கருதப்படுவதால், எச்சரிக்கையை கைவிடாமல் இருப்பதே நல்லது என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். சுகாதார நோக்கில் மட்டும் அல்லாமல் பொருளாதார நோக்கிலும், எச்சரிக்கையான அணுகுமுறை அவசியமாகிறது என்றும் நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், பலரும் பொது இடங்களுக்கு செல்வது, ‘ஷாப்பிங்’ செய்வது போன்றவற்றில் ஈடுபட விரும்பலாம். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், ஷாப்பிங் போன்ற செயல்களை தவறவிட்டதாக உணர்பவர்கள் வெளியே சென்று விரும்பிய பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். ‘மால்’கள் போன்றவை திறக்கப்படும் போது இந்த உணர்வு இன்னமும் அதிகரிக்கலாம். அங்காடிகளுக்கு செல்வது தேவையான பொருட்களை வாங்க உதவும் என்றாலும், கொரோனா கால கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியம்.
ஏனெனில், விருப்பம் போல பொருட்களை வாங்க முடிவது உளவியல் நோக்கில் ஆறுதல் அளிக்கலாம் என்பதால், பலரும் கட்டுப்பாடில்லாமல் ஷாப்பிங் செய்யலாம்.பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், ஷாப்பிங் செய்வதன் மூலம் ஆறுதல் கொள்வது ஷாப்பிங் சிகிச்சை என்று குறிப்பிடப்படுகிறது. இதே போல, பொது முடக்கம் விலகும் நிலையில், மீண்டும் இயல்பு நிலை உணர்வை பெற, நுகர்வோர் முனைப்புடன் ஷாப்பிங் செய்ய விரும்பலாம். இதை, ‘பதிலடி ஷாப்பிங்’ என்கின்றனர். இது எல்லாம் சரியாக இருக்கிறது எனும் எண்ணத்தை ஏற்படுத்தினாலும், தேவையில்லாத பொருட்களை வாங்குவது பொருளாதார நோக்கில் பாதகமாக அமையலாம்.
முன்னுரிமை தேவை
எனவே, செலவு பழக்கத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையான பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்வதை தவிர்க்க, ‘கிரெடிட் கார்டு’ போன்றவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டு, தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். ‘விண்டோ ஷாப்பிங்’ எனப்படும், பொருட்களை வாங்காமல் பார்த்துவிட்டு வருவதும் மனதுக்கு திருப்தி அளிக்கும்; அதே நேரத்தில் ‘பட்ஜெட்’டை பாதிக்காமல் இருக்கும். இப்போது மொபைல் போனிலும் பணம் செலுத்தும் வசதி இருப்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மனதளவில் மாற்றத்தை விரும்புகிறவர்கள், கடைகளுக்கு செல்வதற்கு பதில் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வரலாம். நடைபயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றையும் முயற்சிக்கலாம். கடைகளுக்கு சென்றாலும், வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு கொண்டு செல்வது அவசியம். பொது முடக்க கட்டுப்பாடு கற்றுக் கொடுத்திருக்கும் பல விஷயங்களில், நம்முடைய செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என்பதும் ஒன்றாகும்.
அத்தியாவசிய தேவைகள் குறித்த புரிதல் ஏற்பட்டிருப்பதோடு, இதனால் சேமிப்பும் சாத்தியம் ஆகியுள்ளது. எனவே, முன்போல செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து, சேமிப்பு தொகையை முதலீடாக மாற்ற வேண்டும். முதலீட்டை அதிகரிப்பது எதிர்கால பாதுகாப்பிற்கு உதவும் என்பதோடு, தேவையற்ற செலவுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|