பதிவு செய்த நாள்
25 ஜூலை2021
21:12
என்னுடைய, ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்டு’ ஏப்ரல் 2025ல் முதிர்வடைகிறது. அதற்கு முன்னர், 2023ல் மற்றொரு பி.பி.எப்., கணக்கு துவக்கலாமா?
டி.ஆர்.ஸ்ரீனிவாசன், மின்னஞ்சல்.
வேண்டாம். உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, முதிர்வின் போது பணத்தை வட்டியோடு முழுமையாக எடுத்துக் கொள்வது. இரண்டு, அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு, புதிய பங்களிப்பு இல்லாமல் முதிர்வை நீட்டிப்பது. மூன்றாவது, புதிய பங்களிப்போடு முதிர்வை நீட்டிப்பது. இந்த வசதியை பெறுவதற்கு, நீங்கள் உங்கள் வங்கிக்கோ, அஞ்சலகத்துக்கோ தகவல் தரவேண்டும். மேலும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் பி.பி.எப்.,ஐ நீட்டித்துக் கொண்டே போகலாம். இன்னொரு சவுகரியம் என்னவெனில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, அப்போது என்ன மொத்த தொகை இருக்கிறதோ, அதில் 60 சதவீத பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கடன் பத்திரம் என்றால் என்ன?
ஸ்ரீஹரி, வாட்ஸ் ஆப்.
மத்திய – மாநில அரசுகள் முதற்கொண்டு, தனியார் நிறுவனங்கள் வரை அனைவருக்கும் பணம் தேவை. பணத்தை இரண்டு வகையில் பெறலாம். ஒன்று, நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, அதன் மூலம், மூலதனத்தைத் திரட்டுவர் அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட வட்டி தருகிறேன் என்று சொல்லி, கடன் பத்திரங்கள் வெளியிடுவர். அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களை இதுநாள் வரை பெரிய வங்கிகள், மியூச்சுவல் பண்டுகள் போன்றோர் தான் வாங்க முடிந்தது. தற்போது, சிறு முதலீட்டாளர்களும், அவற்றை வாங்குவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க https://www.nseindiaipo.com/eipodc/rest/login என்ற முகவரியில் அணுகலாம்.
வங்கிகளில் வைப்பு நிதி முதிர்வுஅடைந்தால் தானாகவே புதுப்பிக்கப் படாது. வாடிக்கையாளர் தான் அதை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். அதை செய்யவில்லை என்றால், அந்தத் தொகைக்கு சேமிப்புக்கான வட்டி தான் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. இது ஏன் என்று புரியவில்லை?
வி.எஸ்.ஸ்ரீதரன், பண்ருட்டி கண்டிகை.
காரணம் எளிமையானது. கொரோனா காலத்தில், பிற முதலீட்டு இனங்களைவிட, வங்கி வைப்பு நிதி திட்டங்களில் தான் மக்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர். அங்கே வட்டி கொடுத்து மாளவில்லை. சேமிப்பு பெருகும் அளவுக்கு, கடன் பெறுவோர் என்ணிக்கை பெருகவில்லை. இந்நிலையில், வங்கிகளுக்கு வட்டி கொடுப்பது சுமை தானே? சுமையின் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ளவே, உங்களை நேரடியாக வந்து வைப்பு நிதியை புதுப்பித்து கொள்ளச் சொல்கின்றன.
‘பிளெஸ்ஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட்’ மதுரை கிளையில், 5 ஆண்டுகள் சேமிப்பை கட்டி முடித்துவிட்டேன். அந்தப் பணத்தை திரும்பப் பெறும் நேரத்தில், பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முகவர் கூறினார். பணத்தை எப்படி திரும்ப பெறுவது?
குருநாதன், தேனுார், மதுரை மாவட்டம்.
இந்த நிறுவனம் மூடப்பட்டு, அதன் சொத்துக்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெரியாதா? கடந்த ஆண்டு, அக்டோபர் 16ம் தேதியுடன், முதலீட்டை திரும்பப் பெறுவதற்கான இழப்பீடு கோரலை, திவால் ஆணையரிடம் சமர்ப்பிக்கும் காலமும் முடிந்துவிட்டது. வேண்டுமானால், திவால் ஆணையருக்கு prathyumnan2002@yahoo.com என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பி, புதிய கிளெய்ம்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டுப் பாருங்கள்.
மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்ய திட்டம். பரஸ்பர சகாய நிதியில், அதிக ரிஸ்க் இல்லாத பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம். எதில் முதலீடு செய்யலாம்?
ர.சுதாகர், மின்னஞ்சல்.
லிக்விட் பண்டுகள், இண்டெக்ஸ் பண்டுகள் ஆகியவை உங்களுக்கு உகந்தவை. இதில் சிறந்தவற்றில், மாதாந்திர எஸ்.ஐ.பி., முறையில் சேமித்து வாருங்கள். அதிக ரிஸ்க் இல்லாமல், ஓரளவுக்கு நல்ல வருவாயை தரும்.
தங்க பத்திரங்கள் வாயிலாக சேமிப்பது சிறந்தது என்கிறார்களே? இதனால் என்ன நன்மை?
கவிதா பாலாஜி, சென்னை.
ஆபரண தங்கத்தின் மூலம் வருமானம் எதுவும் கிடைக்காது. தங்க பத்திரத்தை வாங்கினால், முதலீட்டுக்கு, ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த வட்டி, ஆண்டுக்கு இரு தவணைகளாக கிடைக்கும். தனி நபர், ஒரு நிதியாண்டில் ௧ கிராம் முதல் 4 கிலோ கிராம் வரையிலும் முதலீடு செய்யலாம். முதிர்வு காலமான 8 ஆண்டுகள் முடிவில், அன்றைய தேதியில் தங்கத்தின் விலை என்னவோ, அந்தத் தொகை கிடைக்கும்.
‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தில், என்.சி.டி., – நான் கன்வெர்டிபள் டிபஞ்சர் முதலீடு செய்துள்ளேன். இது முதிர்வு அடைந்து ஓராண்டு ஆகிறது. இதுவரை முதலீட்டு தொகையும், வட்டியும் கிடைக்கவில்லை; என்ன செய்வது?
சி.பழனியாண்டி, வாட்ஸ் ஆப்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், ‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ என்.சி.டி.,களில் முதலீடு செய்தவர்களின் பணத்தை, வட்டியோடு அடுத்த ஐந்து மாதங்களுக்குள் திருப்பி தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையே, நிதி நெருக்கடியில் இருக்கும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை, இன்னொரு நிறுவனம் கையகப்படுத்த போகிறது. அது நடந்து முடிந்த பின் தான், ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
என் பழைய வீட்டை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் போகிறேன். அதற்கு நீண்டகால மூலதன லாப வரி உண்டா?
கோ.ராம்பிரசாத், வேளச்சேரி.
நீங்கள் அந்த வீட்டை முன்பு என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்று குறிப்பிடவில்லை. வருமான வரிக்கான வலைதளத்துக்கு செல்லுங்கள். அங்கே, ‘இண்டக்சேஷன்’ அட்டவணை இருக்கும். அதை பயன்படுத்தி, அன்றைய உங்கள் வீட்டின் விலைக்கான இன்றைய மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள். தற்போது விற்பனை செய்யும் விலைக்கும், இந்த மதிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று பாருங்கள். பின்னர் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, நீண்டகால மூலதன வரியைக் கணக்கிடுங்கள்: வாங்கிய விலை x விற்பனை செய்யும் ஆண்டின் காஸ்ட் இன்பிளேஷன் இண்டெக்ஸ் / வாங்கிய ஆண்டின் காஸ்ட் இன்பிளேஷன் இண்டெக்ஸ்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில் மற்றும் வாட்ஸ் – ஆப்’ வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|