பதிவு செய்த நாள்
27 ஜூலை2021
07:07
தமிழகத்தில் உள்ள ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை.
இது, எவ்வளவு துாரம் போதுமானது; எதிர்பார்ப்புகள் நிறைவேறிஉள்ளனவா? இக்கேள்வி களுக்கு தொழில் துறையினர் அளித்த பதில்:வாசுதேவன், கூடுதல் செயலர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்: தமிழக அரசு, நான்கு முக்கியமான விலக்குகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. அதன்படி, 20 லட்சம் ரூபாய் வரை, அரசு ஒப்பந்தப் புள்ளிகளை, ஸ்டார்ட் அப் நிறுவனம் பெற வேண்டுமென்றால், அவர்கள் குறைந்தபட்ச முன்பணம் செலுத்த வேண்டாம். ஏற்கனவே குறிப்பிட்ட அளவு பற்றுவரவு உள்ள நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற, கட்டுப்பாடு கிடையாது.
முன் அனுபவம் கோரப்படவில்லை. ஒப்பந்தப்புள்ளி கட்டணத்தில் கூட விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.இவையெல்லாம் வரவேற்கத்தக்கவை தான். ஆனால், ஒரு நிறுவனத்தை ஸ்டார்ட் அப் என நிர்ணயிப்பதற்கான மத்திய அரசின் வரையறைகள் கடுமையாக உள்ளன. அவற்றுக்கேற்ப நிறுவனங்களை உருவாக்குவது கடினம். சீனாவில், பல நாட்டுப் பொருட்களை அப்படியே பிரதியெடுத்து, மீண்டும் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட, ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக ஏற்கப்படுகின்றன.
அதனால், நம் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையில், இன்னும் தளர்வு தேவை.பல பல்கலைகளில், ‘இன்குபேஷன் சென்டர்’ என்ற புதுமைகள் கண்டு பிடிக்கும் மையங்கள் உள்ளன. இவற்றுக்கும் தொழில் துறைக்கும் நேரடி தொடர்பு இல்லை. கண்டுபிடிப்பு மையங்களில் உருவாகும் தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் ஆகியவை, ஒரு தொழில் வாய்ப்பாகவோ, நிறுவனமாகவோ மாறுவதில்லை. அங்கே ஓர் இடைவெளி இருக்கிறது.இதையும் களைந்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் சேர்த்தால் தான், தமிழக அரசின் சலுகைகள் பயன் அளிக்கத் துவங்கும்.
ஜே.வி.சி.ஸ்ரீராம், பொருளாதார தொழில் ஆலோசகர்:ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரையிலான அரசுத் துறை ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்க சலுகை அளிக்கப் பட்டுள்ளது. பல அரசு ஒப்பந்தங்கள், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தான் இருக்கும். அதனால், 1 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தப் புள்ளிகள் வரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அத்துடன், மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம், பிணை இல்லாத கடன் வசதி அல்லது ‘ஓவர் டிராப்ட்’ வசதி வழங்க வேண்டும். ஏனெனில், அவர்களிடம் தொழில்நுட்பமும், புத்தாக்க அறிவும் இருக்குமே தவிர, அதை நிறைவேற்றுவதற்கான முதலீடு இருக்க வாய்ப்பில்லை.
தமிழக அரசு, தொழில் முதலீட்டாளர்களை அழைத்து, அவர்கள் வழியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கச் செய்யலாம். மஹாராஷ்டிரா அரசு போல, மாணவர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்கப்படுத்தினால், தமிழகத்துக்கு பலன் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஸ்டார்ட் அப் நிறுவனம் என்றால் என்ன?மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற வலைத்தளம் இதற்குத் தெளிவான விளக்கத்தை வழங்குகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள்; பொருட்கள், வழிமுறைகள், சேவைகளை மேம்படுத்துவது;
வேலைவாய்ப்பை பெருக்குதல், சொத்துகளை உயர்த்துதல் உள்ளிட்ட தகுதிகள் உடையவை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப்படுகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்படுவதற்கு நான்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனம், தனியார், கூட்டு அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். முதல் 10 ஆண்டுகள் வரை, அந்நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்படும். அந்த காலகட்டத்தில், ஒரு நிதியாண்டில், மொத்த விற்றுமுதல் 100 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய நிறுவனங்கள், www.startupindia.gov.in. என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொண்டால் போதும். மத்திய அரசின் பல்வேறு பயிற்சி வகுப்புகள், திட்டங்கள், மாநில அரசுகளின் கொள்கைக் குறிப்புகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.அரசாங்கத்தின் கொள்முதல் வரையறைகளில் சலுகைகள், சிட்பி வங்கியின் நிதியுதவியைப் பெறுவது, மூன்று தொடர் ஆண்டுகளுக்கு வரிச் சலுகை, முதலீட்டுக்கு வரிச் சலுகை போன்றவற்றைப் பெறுவதற்கு, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.
இதையும் ஸ்டார்ட் அப் இந்தியா வலைதளத்தில் இருந்தே பெறலாம்.உலகளவில் அமெரிக்காவைத் தொடர்ந்து, சிங்கப்பூர், இஸ்ரேல், தென் கொரியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தழைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன.இந்தியாவில், ஆண்டுதோறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மாநில தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், முதல் இரண்டு இடங்களில் குஜராத், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளது.----------
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|